வியாபாரிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பலூன்கள் வெடித்ததில் பினாங்கு மாநகர மன்ற அதிகாரிகள் இருவர் காயம்

3 பிப்ரவரி 2026, 6:22 AM
வியாபாரிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பலூன்கள் வெடித்ததில் பினாங்கு மாநகர மன்ற அதிகாரிகள் இருவர் காயம்

ஜார்ஜ் டவுன், பிப் 3: பினாங்கு மாநகர மன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்ட எரிவாயு நிரப்பப்பட்ட பலூன்கள் வெடித்துச் சிதறியதில், அந்த மன்றத்தைச் சேர்ந்த இரண்டு அமலாக்க அதிகாரிகள் காயமடைந்தனர். நேற்று நடைபெற்ற இந்த விபத்தில் பெரும் தீ விபத்தும் ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் நேற்று இரவு 7.55 மணியளவில், யூனியன் சாலையில் உள்ள மாநகர மன்ற உரிமம் வழங்கும் துறை அலுவலகத்திற்கு முன்பாக நிகழ்ந்ததாக பினாங்கு மாநகர மன்றம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. "பாதிக்கப்பட்ட அதிகாரிகளில் ஒருவருக்கு இரண்டு கைகளிலும் முகத்தின் ஒரு பக்கத்திலும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் பினாங்கு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொரு அதிகாரி லேசான காயங்களுடன் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்," என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பலூன்களில் இருந்த காற்றை வெளியேற்றுவதற்காக அதிகாரிகள் அவற்றை ஊசியால் குத்தியபோது இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் மாநகர மன்றத்திற்குச் சொந்தமான வாகனத்தின் பின்பகுதியும், பறிமுதல் செய்யப்பட்ட ஏனையப் பொருட்களும் தீக்கிரையாயின. பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கை அலுவலகத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 31 முதல் மேகாலிஸ்டர் சாலை, உத்தாமா சாலை மற்றும் காட்லீப் சாலை ஆகிய பகுதிகளில் உரிமம் இன்றி வியாபாரம் செய்பவர்களை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். அப்போது சட்டவிரோதமாக எரிவாயு நிரப்பப்பட்ட பலூன்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. சம்பந்தப்பட்ட வியாபாரிகள் அந்த இடத்திலிருந்து வெளியேறுமாறு பலமுறை வாய்மொழி எச்சரிக்கை விடுக்கப்பட்டும், அவர்கள் தொடர்ந்து செயல்பட்டதால் நேற்று மாலை அந்தப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற விபத்துகள் மீண்டும் நிகழாமல் இருக்க, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை அழிக்கும் முறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள மாநகர மன்றம் திட்டமிட்டுள்ளது. முன்னதாக, மாநகர மன்றத்தின் நான்கு சக்கர வாகனம் தீப்பற்றி எரியும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.