கோலாலம்பூர், ஜன 21 - முதன்மை நெடுஞ்சாலைகளில் உள்ள அவசரப் பாதைகளில் (SMART LANE) ஏற்படும் சாலை விபத்துகள் குறைத்துள்ளன.
சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் நெரிசலைக் குறைப்பதிலும் இத்திட்டம் தனது செயல்திறனை நிரூபித்துள்ளது என்று பொதுப்பணி துறை அமைச்சர் அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.
உச்ச நேரங்கள் மற்றும் பண்டிகை காலங்களில், இலகுரக வாகனங்களுக்கு தற்காலிகமாக அவசரப் பாதைகள் திறந்துவிடப்படும்.
பெரும்பான்மையான விபத்துகள் சாலையைப் பயன்படுத்துபவர்களின் அலட்சியப் போக்கினால் ஏற்படுகின்றதே தவிர நெடுஞ்சாலையின் கட்டமைப்பால் அல்ல என்று நந்தா லிங்கி தெரிவித்தார்.
புத்ரா மஹ்கோத்தா-சவுத்வில்லே போன்ற வழித்தடங்களில் அவசரப் பாதைகளை பயன்படுத்தும் முறை அமல்படுத்தத் தொடங்கியதிலிருந்து சாலை விபத்துகள் 22 விழுக்காடு வரை குறைந்துள்ளதாகப் பாதுகாப்பு பகுப்பாய்வு முடிவுகள் காட்டுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
"ஒட்டுமொத்தமாக அவசரத் தடத்தில் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
அந்த வழியாகச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது அவை குறிப்பிடத்தக்கதாக இல்லை" என நந்தா லிங்கி குறிப்பிட்டார்.
இதனிடையே பெருநாள் காலங்களில் நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நீண்டகால திட்டங்களில் கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்படும் சாலை விரிவாக்கத் திட்டமும் அடங்கும் என்று அவர் கூறினார்.
பெர்னாமா


