ஹராரே, ஜன 20- ஜிம்பாப்வே நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78-ஆக உயர்ந்துள்ளது.
மேலும், சுமார் 61 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் சிவில் பாதுகாப்புத் துறை (DCP) தெரிவித்துள்ளது.
இவ்வேற்பட்ட இயற்கை சீற்றத்தினால் நாடு முழுவதும் இதுவரை 1,068 வீடுகள், 41 பள்ளிகள், ஐந்து சுகாதார நிலையங்கள் மற்றும் ஐந்து மேம்பாலங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.
குறிப்பாக, நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற சாலைக் கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் மற்றும் அவசர சேவைகளை வழங்குவதில் பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையில், கனமழையினால் மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்துள்ளன. சேக (Seke) மாவட்டத்திலுள்ள அணைப் பகுதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதோடு, அங்கு நீர்யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் அந்த அணை தற்போது 'ஆபத்தான மண்டலமாக' அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



