ஷா ஆலம், ஜன 19: சபா, கினாபத்தாங்கில் உள்ள செம்பனை தோட்டத்தில், பிறந்த சில தினங்களே ஆனதாக நம்பப்படும் ஆண் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
2.4 கிலோகிராம் எடையுள்ள அந்தக் குழந்தை, தோட்டத் தொழிலாளி ஒருவரால் கண்டெடுக்கப்பட்டது என கினாபத்தாங்கன் மாவட்டக் காவல்துறைத் தலைமை கண்காணிப்பாளர் டி. ரவி கூறினார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு இரவு 7.27 மணிக்கு புகார் கிடைத்துள்ளது.
"குழந்தை உயிருடன் காணப்பட்டது, உடனடியாக மேல் சிகிச்சைக்காக கினாபத்தாங்கன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், எந்த காயங்களும் ஏற்படவில்லை என்றும், தற்போது மருத்துவமனை மற்றும் சமூக நலத்துறையின் மேற்பார்வையில் இருப்பதாக ரவி அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை மற்றும் இதுவரை எந்த சாட்சிகளும் விசாரணைக்கு உதவ முன்வரவில்லை என்றும் ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
"எவரும் கைது செய்யப்படவில்லை. மேலும் பிறப்பை மறைத்ததற்காக தண்டனைச் சட்டப் பிரிவு 317 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது," என்று அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பான தகவல்களைக் கொண்ட பொதுமக்கள் விசாரணைக்கு உதவ 089-561890 என்ற எண்ணில் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


