பேங்காக்- ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, தாய்லாந்தில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியிட்ட நாடாளுமன்ற இடங்களில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியதே இதற்குக் காரணம்.
தொடக்கக்கட்ட முடிவுகளின்படி, பிரதமர் அனுதின் சார்ன்விராகுல் தலைமையிலான பூம்ஜாய்தாய் கட்சி, 400 நாடாளுமன்றத் தொகுதிகளில் 174 இடங்களைக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. இது 94 விழுக்காடு வாக்குகள் எண்ணப்பட்ட நிலவரமாகும்.
அதனைத் தொடர்ந்து, முற்போக்குக் கட்சியான மக்கள் கட்சி 87 இடங்களையும், பியூ தாய் கட்சி (58), கிளாத்தாம் கட்சி (56), மற்றும் ஜனநாயகக் கட்சி (10) இடங்களையும் வென்றுள்ளன.
பூம்ஜாய்தாய் கட்சி முன்னணி வகித்தாலும், பெரும்பான்மை இல்லாததால், கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதில் அனுதினின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மீது கவனம் திரும்பியுள்ளது.
அதிகாரப்பூர்வமற்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், எந்த அரசியல் கட்சியும் தன்னைத் தொடர்பு கொள்ளவில்லை என்று அனுதின் கூறினார்.
“அனைத்து சாத்தியக்கூறுகளும் பரிசீலனையில் உள்ளன. எந்த முடிவையும் கட்சியின் செயற்குழு முதலில் விவாதித்து இறுதி செய்ய வேண்டும்,” என்று திங்களன்று அரச மாளிகையில் நடைபெற்ற மரியாதை நிகழ்வுக்குப் பிறகு அவர் கூறினார்.
பியூ தாய் கட்சியை அரசாங்கத்தில் சேர பூம்ஜாய்தாய் அழைக்குமா என்று கேட்டதற்கு, அதற்கென நிலையான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று அனுதின் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், பியூ தாய் கட்சியின் தலைவர் ஜூலபுன் அமோர்ன்விவாட், அரசாங்கம் அமைப்பது குறித்து பூம்ஜாய்தாய் கட்சியுடன் இதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றார். கூட்டணிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் பொறுப்பு தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“பியூ தாய் இந்த முயற்சியைத் தொடங்காது, மாறாக நிலைமையின் வளர்ச்சியைப் பொறுத்திருந்து கவனிக்கும். ஒத்துழைப்பு விஷயத்தில் எங்கள் கட்சி எந்த வரம்புகளையும் விதிக்கவில்லை,” என்று அவர் திங்களன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
எதிர்காலக் கூட்டணி என்பது கருத்துகள், சித்தாந்தங்கள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் அமையும் என்றும் ஜூலபுன் கூறினார்.
முன்னதாக, தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க, பியூ தாய் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுடன் ஜூலபுன் கட்சியின் தலைமையகத்தில் ஒரு அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார்.
தாய்லாந்தின் 500 இடங்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபை, கலப்பு தேர்தல் முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இதில், 400 இடங்கள் தொகுதி வாரியாக அதிக வாக்குகள் பெறும் முறையிலும், மீதமுள்ள 100 இடங்கள் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைக்கும் தேசிய வாக்குகளின் விகிதாச்சார அடிப்படையிலும் ஒதுக்கப்படுகின்றன.
இந்தத் தேர்தல் முடிவுகளைத் தேர்தல் ஆணையம் (ECT) 60 நாட்களுக்குள், அதாவது ஏப்ரல் 9-ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும். முடிவுகள் உறுதி செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும்.
தாய்லாந்தில் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் சிக்கல், பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
10 பிப்ரவரி 2026, 12:37 AM
தொடர்புடைய செய்திகள்
national
நிப்பா நச்சுயிரி பரவலைத் தடுக்க கிளந்தான் எல்லைப் பகுதிகளில் சுகாதாரப் பரிசோதனைகள் தீவிரம்
Evelyn Moses
3 பிப்ரவரி 2026

selangor
தாய்லாந்தில் இரயில் மீது கிரேன் விழுந்து விபத்து; மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை
Evelyn Moses
15 ஜனவரி 2026

national
தாய்லாந்தின் தெற்கு பகுதிகளில் நடந்த தாக்குதலில் இதுவரை எந்த மலேசியரும் பாதிக்கப்படவில்லை
Shalini Rajamogun
12 ஜனவரி 2026

antarabangsa
குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து தாய்லாந்தின் நாரதிவாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்
Evelyn Moses
12 ஜனவரி 2026





