ஷா ஆலம், ஜனவரி 8: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) முன்னாள் தரைப்படைத் தளபதி ஜெனரல் டான் ஸ்ரீ முகமது ஹஃபிசுதீன் ஜந்தான் மற்றும் அவரது இரு மனைவிகளை தரைப்படைக்கான ஒப்பந்தக் கொள்முதல் கார்டல் தொடர்பான வழக்கில் கைது செய்துள்ளது.
RM2.4 மில்லியன் பணத்தை மோசடி செய்ய உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு தம்பதியினரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைதுகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி உறுதிப்படுத்தியதாக செய்தி வெளியிட்டுள்ளது. டான் ஸ்ரீ முகமது ஹஃபிசுதீன் ஜந்தான் மற்றும் அவரது மனைவிகளை ஏற்றிச் சென்ற வாகனம் இன்று பிற்பகல் 3 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையக வளாகத்திற்குள் நுழைந்தது.
மேலும் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி முன்னாள் தரைப்படைத் தளபதி வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவ்வாறு செய்ய முடியவில்லை என்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்திருந்தது. கடந்த டிசம்பர் 23ஆம் தேதி பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் சென்று, 2023ஆம் ஆண்டு முதல் தரைப்படை சம்பந்தப்பட்ட சில திட்டங்கள் குறித்து ஆரம்பகட்ட விசாரணையைத் தொடங்கியது.
கடந்த டிசம்பர் 29ஆம் தேதி, அந்த அதிகாரியின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் ஆறு வங்கிக் கணக்குகளை விசாரணைக்கு உதவுவதற்காக முடக்கியுள்ளதாக டான் ஸ்ரீ அஸாம் தெரிவித்தார்.
அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின், டான் ஸ்ரீ முகமது ஹஃபிசுதீன் ஜந்தான் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை முடியும் வரை உடனடியாக விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டதை உறுதிப்படுத்தினார்.


