ஏஹ்சான் பால் பண்ணை செயல்பாடு மார்ச் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்ப்பு

26 டிசம்பர் 2025, 3:32 AM
ஏஹ்சான் பால் பண்ணை செயல்பாடு மார்ச் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்ப்பு

ஷா ஆலம், டிச 26: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 1,200க்கும் மேற்பட்ட உயர்தர ஜெர்சி-ஹால்ஸ்டீன் ஃப்ரீசியன் (F2) கறவை மாடுகளைக் கொண்ட உலு சிலாங்கூரில் உள்ள ஏஹ்சான் பால் பண்ணை செயல்பாடு எதிர்வரும் மார்ச் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுமானப் பணிகள் தற்போது சீராக நடைபெற்று வருகின்றன, பிரதான கட்டமைப்பில் கிட்டத்தட்ட 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது என சிலாங்கூர் வேளாண் மேம்பாட்டுக் கழகத்தின் (PKPS) குழு தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

இதில் குறிப்பாக பால் உபகரணங்கள் சம்பந்தப்பட்ட, நடவடிக்கைகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளதாகவும் டத்தோ வீரா டாக்டர் முகமட் கைரில் முகமது ராசி விளக்கினார்.

“ஜனவரியில் இது செயல்படவிருந்தது, ஆனால் கணிக்க முடியாத வானிலை உட்பட பல காரணிகளால் தாமதங்கள் ஏற்பட்டன. அதன்படி, ஆபத்து மேலாண்மை நடவடிக்கையாக செயல்பாட்டு அட்டவணை சரிசெய்யப்பட்டுள்ளது.

“ஏஹ்சான் டெய்ரி ஃபாம் நீண்டகாலத்தில் நிலையான, பாதுகாப்பான மற்றும் திடமான முறையில் செயல்படுவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கட்டுமானப் பணியின் முன்னேற்றம் உற்சாகமளிக்கும் வகையில் நடைபெற்று வருவதுடன், அது எப்போதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது,” என்று அவர் மீடியா சிலாங்கூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

42 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பால் உற்பத்தி மையம், ஆண்டுக்கு அதிகபட்சமாக 1.8 மில்லியன் லிட்டர் பாலை உற்பத்தி செய்ய இலக்கு கொண்டுள்ளது. இதன் மூலம், இத்தகைய பொருட்களின் இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்க முடியும்.

இந்த மையம் ஆண்டுதோறும் RM7.5 மில்லியனைத் தாண்டிய வருமானத்தை உருவாக்கும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், 100-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளையும் வழங்கும் என PKPS எதிர்பார்க்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், துணை பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அக்மட் சஹிட் ஹமிடி, மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி ஆகியோருடன் இணைந்து, இந்த மையத்தின் கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.