சிபு, அக். 8- முக்காவில் நேற்று முன்தினம் மாலை சமூக ஊடகங்கள் வாயிலாக கத்தியைக் காட்டி மெலனாவ் பிராந்திய பேச்சுவழக்கில் மிரட்டல் விடுத்ததாக நம்பப்படும் இ-ஹெய்லிங் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முப்பத்தாறு வயதான சந்தேக நபரை முக்கா மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் மாலை 5.30 மணியளவில் கைது செய்ததாக முக்கா மாவட்ட காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி முகமது ரிசால் அலியாஸ் கூறினார்.
அந்த ஆடவரிடமிருந்து ஒரு கத்தி, கைப்பேசி, ஒரு கார், முகமூடி மற்றும் வீடியோ பதிவின் போது பயன்படுத்தப்பட்ட உடைகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சந்தேக நபருக்கு போதைப்பொருள் பழக்கம் இல்லை என்பது
சிறுநீர் பரிசோதனையில் தெரியவந்த வேளையில் அவருக்கு முந்தைய குற்றப் பதிவு எதுவும் இல்லை என்பதும் கண்டறியப் பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மேல் விசாரணைக்கு உதவுவதற்காக அந்த ஆடவரை இரண்டு நாட்கள் காவலில் வைப்பதற்கான நீதிமன்ற உத்தரவை காவல்துறை பெற்றதாக முகமது ரிசால் கூறினார்.
சமூக ஊடகங்களில் வைரலான இரண்டு நிமிடம் 16 வினாடிகள் கொண்ட காணொளி தொடர்பாக காவல் துறைக்கு புகார் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். மெலனாவ் பேச்சுவழக்கில் ஒரு நபர் கத்தியைக் காட்டி மிரட்டும் காட்சி அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
இந்த மிரட்டல் தொடர்பில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 34 வயது நபரிடமிருந்து அக்டோபர் 6 ஆம் தேதி மாலை 5.00 மணியளவில் புகார் வந்தது. தகவல் மற்றும் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், சந்தேக நபர் அதே நாளில் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டார் என்று அவர் கூறினார்.
புகார்தாரரும் சந்தேக நபரும் ஒருவரையொருவர் அறிந்திருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டதாகவும் அவமரியாதையாக நடந்து கொண்டதற்காக புகார்தாரர் சந்தேக நபரை கண்டித்ததால் சந்தேக நபர் கோபமடைந்து முகநூலில் அச்சுறுத்தும் வீடியோவை பதிவேற்றியதாகவும் முகமது ரிசால் தெரிவித்தார்.
முகநூல் வழி மிரட்டல் காணொளி வெளியிட்ட ஆடவர் கைது
8 அக்டோபர் 2025, 2:37 AM