ஷா ஆலம், அக். 4- ஆந்திர பிரதேசத்தின் புதிய நிர்வாகத் தலைநகரான அமராவதியில் 10,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய மலேசிய முதலீட்டாளர் குழு முன்வந்துள்ளது
அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுற்றுலா மற்றும் உபசரணை கல்வி, வர்த்தகம் மற்றும் வணிகம் மற்றும் ரியல் சொத்துடைமைத் துறைகளில் அங்கு முதலீடு செய்ய மலேசிய பிரதிநிதிகள் குழு ஆர்வம் தெரிவித்துள்ளது
அமராவதியில் மூலதனப் பணிகளின் முன்னேற்றத்தை நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பி. நாராயணா வெள்ளிக்கிழமை மலேசியக் பேராளர் குழுவுடன் ஆய்வு செய்தார்.
இந்தக் குழுவில் சிலாங்கூர் மாநில மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ், மலேசியா-ஆந்திரா வணிக சபையின் பிரதிநிதிகள் மற்றும் பல தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர்.
சுற்றுலா மற்றும் உபசரணை, கல்வி, வர்த்தகம் மற்றும் வணிகம் மற்றும் சொத்துடைமைத் துறைகளில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமராவதியில் 10,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய அவர்கள் ஆர்வம் தெரிவித்தனர்.
அமராவதியில் மருத்துவ பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான பரிந்துரையை சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தின் நிர்வாகி ஒருவர் முன்மொழிந்தார். அதே நேரத்தில் பெர்ஜெயா குழுமம் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை நிறுவ முன்வந்துள்ளது.
இந்த நிகழ்வில் பேசிய நாராயணா, இந்த நகர்த் திட்டத்திற் கு 51,000 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர்கள் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அரசு செயலகக் கட்டிடங்கள், சட்டமன்றம் மற்றும் உயர்நீதிமன்றக் கட்டிடங்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.எல்.சி.க்களுக்கான 4,000 குடியிருப்புகள், 360 கிலோமீட்டர் டிரங்க் சாலைகள், 1,500 கிலோமீட்டர் எல்.பி.எஸ் சாலைகள் ஆகியவை உருவாக்கப்பட்டு வரும் உள்கட்டமைப்புகளில் அடங்கும்.