சிரம்பான்,அக் 4- நான்கு நாட்களுக்கு முன்பு செனாவாங்கில் உள்ள ஒரு பள்ளியில் மயக்கமடைந்த நிலையில் கண்டு பிடிக்கப் பட்ட நான்காம் வகுப்பு மாணவர் பின்னர் மரணமடைந்தது தொடர்பான விசாரணைக்காக இதுவரை 35 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டவர்களில் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரும அடங்குவர் என்று நெகிரி செம்பிலான் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அகமது தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பான பள்ளி, தடயவியல் பிரிவு மற்றும் மருத்துவமனையின் அறிக்கைகள் மற்றும் பதிவுகளை நாங்கள் பெற்று வருகிறோம். விசாரணை ஆவணங்கள் விரைவில் துணை அரசு வழக்கறிஞருக்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது என அவர் சொன்னார்.
துன்புறுத்தல் குற்றங்கள் தொடர்பாக தண்டனைச் சட்டத்தின் 507 சி பிரிவின் கீழ் தொடர்ந்து விசாரணைகள் இன்னும் நடந்து வருகின்றன. மேலும் விசாரணையை சீர்குலைக்கும் எந்தவொரு ஆதாரமற்ற ஊகங்களையும் வெளியிட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்று அவர் இன்று பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை 10 வயது மாணவர் பள்ளி கழிப்பறையில் மயக்கமடைந்த நிலையில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர் இறந்துவிட்டது மருத்துவமனையில் உறுதிப்படுத்தப்பட்டது.
ரெம்பாவ் மருத்துவமனை தடயவியல் பிரிவில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் அம்மாணவரின் மரணத்திற்குக் கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம் என்று கண்டறியப் பட்டதாகவும் பாதிக்கப் பட்டவரின் உடலில் வேறு எந்த காயங்களும் இல்லை என்றும் அல்சாஃப்னி முன்னதாக கூறியிருந்தார்.
கழிப்பறையில் மாணவர் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பில் 35 பேரிடம் வாக்குமூலம் பதிவு
4 அக்டோபர் 2025, 10:14 AM