ஷா ஆலம், செப். 27- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான தீபாவளி பொது உபசரிப்பு கிள்ளான், லிட்டில் இந்தியா, செட்டி பாடாங்கில் அடுத்த மாதம் 18ஆம் தேதி சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
மாலை 7.00 மணி தொடங்கி நள்ளிரவு 12.00 மணி வரை நடைபெறும் இந்த உபசரிப்பில் 5,000 பேர் வரை கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு கூறினார்.
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் நடைபெறும் இந்த உபசரிப்பு நிகழ்வில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளதாக அவர் சொன்னார்.
இந்த வருடாந்திர நிகழ்வில் கிள்ளான் வட்டாரம் மட்டுமின்றி மாநிலம் முழுவதுமிருந்து சுமார் 5,000 பேர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் வருகையாளர்களை குதூகலப்படுத்தும் வகையில் கலை, கலாசார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இது தவிர அறுசுவை உணவுகளுடன் கூடிய விருந்துபசரிப்பும் நடைபெறும்.
இந்த பொது உபசரிப்பு நிகழ்வை
முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆலயங்களின் பொறுப்பாளர்களிடம் மாநில அரசின் மானியத்தை வழங்கும் அங்கமும் இதில் அடங்கும்.
இது தவிர ஐ-சீட் எனப்படும் சிலாங்கூர் இந்திய சமூக மற்றும்
தொழில்முனைவோர் மேம்பாட்டு இலாகா சார்பாக தொழில் முனைவோருக்கு வர்த்தக உபகரணங்களும் வழங்கப்படும். எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 145 பேருக்கு இந்நிகழ்வில் வர்த்தக உபகரணங்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
கிள்ளான் செட்டி பாடாங்கில் சிலாங்கூர் தீபாவளி பொது உபசரிப்பு- அக்.18 ஆம் தேதி
28 செப்டெம்பர் 2025, 9:45 AM