ad

தமிழ்ப்பள்ளி மாணவர் பேருந்து கட்டணம் - வெ.1.02 மில்லியன் ஒதுக்கீடு

28 செப்டெம்பர் 2025, 5:37 AM
தமிழ்ப்பள்ளி மாணவர் பேருந்து கட்டணம் - வெ.1.02 மில்லியன் ஒதுக்கீடு
தமிழ்ப்பள்ளி மாணவர் பேருந்து கட்டணம் - வெ.1.02 மில்லியன் ஒதுக்கீடு

ஷா ஆலம், செப். 28- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் குறைந்த வருமானம் பெறும்
பி40  குடும்பங்களைச் சேர்ந்த   மாணவர்களுக்கு  இலவசப் பேருந்து கட்டணம் வழங்குவதற்காக மாநில அரசு இவ்வாண்டு 1.02 மில்லியன் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.


தகுதி உள்ள மாணவர்களுக்கு ஆண்டுக்கு  300 வெள்ளி வழங்க வகை செய்யும் இத்திட்டத்திற்கு  இதுவரை 3,487 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான  ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.பாப்பாராயுடு  தெரிவித்தார்.

இந்த விண்ணப்பங்கள் யாவும் தற்போது  யுபென் எனப்படும் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவின் பரிசீலனையில்  உள்ளதாகக் கூறிய அவர்,   நிபந்தனைகளை கடுமையாக பின்பற்றுவதால் விண்ணப்பம் செய்யும்  அனைத்து   மாணவர்களுக்கும்  இந்த உதவித் தொகை கிடைப்பதற்குரிய சாத்தியம் இல்லை என்பதையும்  தெளிவுபடுத்தினார்.

ஆகவே, இந்த திட்டத்தில் விடுபட்ட மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பள்ளி மேலாளர் வாரியங்கள் உதவ முன்வர வேண்டும். காரணம் தமிழ்ப்பள்ளிகளுக்கு மாநில அரசு சார்பில் 50 லட்சம் வெள்ளி வழங்குகிறோம். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட மாணவர்களும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களாக இருப்பார்கள். சில சமயங்களில் ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் படித்தால் ஒருவருக்கு மட்டுமே உதவி வழங்கப்படும். இத்தகைய மாணவர்களுக்கு உதவி வழங்குவது பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் மேலாளர் வாரியங்களின் கடமையாகும் என்றார் அவர்.

இந்த இலவசப் பேருந்து கட்டணம்  இன்னும் ஒரு மாத காலத்தில் சிறப்பு நிகழ்வின் வாயிலாக  மாநிலத்திலுள்ள 99 பள்ளிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

வசதி குறைந்த தமிழ்ப்பள்ளி மாணவர்கள் குறிப்பாக தோட்டப்புறங்களைச் சேர்ந்தவர்களுக்கு இலவசப் பேருந்து கட்டணம் வழங்கும் திட்டத்தை சிலாங்கூர் மாநில அரசு கடந்த 2013ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தி வருகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.