ரவாங், செப் 24: அடிக்கடி திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படும் ரவாங் நகரில் உள்ள தாழ்வான மெக்ஸ்வெல் சாலைப் பகுதியில், மலேசிய சாலை தகவல் அமைப்பு (MARRIS) ஒதுக்கீட்டின் மூலம் RM350,000 செலவில் வடிகாலை மேம்படுத்தும் திட்டத்தை செலாயாங் நகராண்மை கழகம் மேற்கொண்டது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்கிய இந்தத் திட்டம் நவம்பர் 19 ஆம் தேதி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஒவ்வொரு முறையும் கனமழை பெய்யும்போது வெள்ளப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சுமார் 50 கடை உரிமையாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று ராவாங் மாநில சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட் கூறினார்.
"நீர்த்தேக்கத்தின் கொள்ளளவையும் நீர் ஓட்டத்தையும் அதிகரிக்க 500 மீட்டர் நீளமுள்ள இரண்டு வடிகால்வாய்கள் இரு மடங்கு அளவுக்கு அகலப்படுத்தப்படும். காலனித்துவ காலத்திலிருந்தே இருக்கும் இந்தப் பழைய பகுதியில் வெள்ள அபாயத்தைக் குறைக்க இந்நடவடிக்கை உதவும் என்று நம்பப்படுகிறது," என்று அவர் MPS பிரதிநிதிகளுடன் திட்டத்தை ஆய்வு செய்தபோது கூறினார்.





