கோலாலம்பூர், செப். 18 - வடக்கு-தெற்கு விரைவுச் சாலையில் 26.5 முதல் 19.3வது கிலோ மீட்டர் வரையிலான கூலாய்- செனாய் பகுதியின் ஸ்மார்ட் தடத்தை (தெற்கு நோக்கி) பிளஸ் மலேசியா பெர்ஹாட் (பிளஸ்) செப்டம்பர் 22ஆம் தேதி முதல் மூடவுள்ளது.
ஜோகூர் மாநிலத்தில் வடக்கு செனாய் முதல் கூலாய் வரையிலான (கட்டம் 1 தொகுப்பு பி) பாதையில் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் கூடுதல் பாதை கட்டுமானத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த தடத்தை மூடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என பிளஸ் நிறுவனம் ஓர் அறிக்கையில் கூறியது.
இக்காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட சாலையில் தற்போதுள்ள இரண்டு தடங்களும் வழக்கம் போல் திறந்திருக்கும். இதன்வழி போக்குவரத்தை சீராக்கவும் நெடுஞ்சாலை பயனீட்டாளர்களுக்கு போக்குவரத்து இடையூறுகளை குறைக்கவும் முடியும்.
நெடுஞ்சாலையைப் பயன்படுத்துவோர் கட்டுமானப் பணிப் பகுதியைக் கடந்து செல்லும்போது சமீபத்திய போக்குவரத்துத் தகவல்களைப் பெறுவதோடு பிளஸ் பணியாளர்கள் வழங்கும் அனைத்து அறிவுறுத்தல்களைப் பின்பற்றும் அதேவேளையில் பிளஸ் செயலியைப் பயன்படுத்தி தங்கள் பயணங்களைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய போக்குவரத்து தகவல் மற்றும் உதவிக்கு பயனர்கள் PUTRI இயங்கலை உதவியாளர், X@plustrafik செயலி அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மின்னணு செய்தி காட்சிகள் (VMS) ஆகியவற்றை காணலாம். அவசரநிலை ஏற்பட்டால் PLUSLine 1800-88-0000 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
கூலாய் முதல் செனாய் வரை ஸ்மார்ட் தடங்களை பிளஸ் நிறுவனம் மூடும்
18 செப்டெம்பர் 2025, 9:52 AM