கோலாலம்பூர், செப் 8 - அடுத்த ஆண்டுக்கான தேசிய சேவை பயிற்சி திட்டம் 3.0இல் 8,000க்கும் மேற்பட்ட இளையோரை பங்கேற்க வைக்க தேசிய சேவை பயிற்சித் துறை இலக்கு கொண்டுள்ளது.
இந்த எண்ணிக்கை, நெகிரி செம்பிலான் கெமாஸ், சரவாக் கூச்சிங்கில் உள்ள செமந்தான் மற்றும் சபா, தவாவின் குகுசான் ஆகிய புதிய முகாம்களின் பங்கேற்பையும் உள்ளடக்கி இருப்பதாக தேசிய சேவை பயிற்சித் துறையின் தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் டத்தோ யாகோப் சமிரான் தெரிவித்தார்.
கோலாலம்பூரில், இன்று நடைபெற்ற, 2025-ஆம் ஆண்டின் PLKN 3.0 தொடருக்கான இளையோர் பதிவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அவர் அதனைக் கூறினார்.
பிற்பகல் 12 மணி நிலவரப்படி இந்த ஆண்டுக்கான மூன்றாம் தொடருக்கான பதிவில் மொத்தம் 529 இளையோர் தங்களைப் பதிவு செய்துக்கொண்டுள்ளனர்.
பெர்னாமா