ஷா ஆலம், செப். 4 - வெள்ள நீரை வெளியேற்றும் பணியை சீராக மேற்கொள்வதற்கு ஏதுவாக செத்தியா ஆலமில் உள்ள ஐந்து நீர்த் தேக்க குளங்களை ஆழப்படுத்தும் பணியை ஷா ஆலம் மாநகர் மன்றம் மேற்கொண்டு வருகிறது.
நீரோட்டம் குறைந்து அந்த அந்த ஏரிகளின் செயல்திறன் குறைவதற்கு காரணமாக விளங்கும் வண்டல் மண்ணை அகற்றுவதற்கு இந்த பராமரிப்பு பணி தேவைப்படுவதாக ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் சைமன் சியோ கூறினார்.
இப்பகுதியில் மொத்தம் ஐந்து நீர்ப்பிடிப்பு குளங்கள் உள்ளன. அவற்றில் சென்ட்ரல் பார்க் மற்றும் பெர்சியாரான் செத்தியா இண்டா ஆகிய இடங்களில் உள்ள குளங்களில் சீரமைப்பு பணி முற்றுப் பெற்று விட்டது என்று அவர் தெரிவித்ததாக தி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த ஐந்து குளங்களை ஆழப்படுத்துவதற்கும் அதில் படிந்துள்ள சகதியை அகற்றுவதற்கும் 57 லட்சம் வெள்ளி செலவு பிடித்துள்ளது. இதற்கு உண்டான செலவுகளை மேம்பாட்டு நிறுவனமான எஸ்.பி. செத்தியா ஏற்றுக் கொண்டது என்று அவர் சொன்னார்.
மழை நீரை சேகரித்து வைத்து பின்னர் கட்டங் கட்டமாக கிள்ளான், சுங்கை காப்பார் கெச்சில் ஆற்றில் விடுவதற்கு ஏதுவாக ஆர்பன் பார்க் செத்தியா தைப்பானிலுள்ள நீர்த் தேக்க குளம் 2.5 மீட்டரை வரை ஆழப்படுத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக பெய்யும் மழையின் போது பெருக்கெடுக்கும் நீரை முறையாக மேலாண்மை செய்வதற்கு இந்த குளங்கள் முறையாகச் செயல்படுவது அவசியம் என மாநகர் மன்றம் கருதுகிறது என்று அவர் கூறினார்.
இந்த குளத்தை துப்பரவு செய்வதன் மூலம் மழை நீரை சேகரித்து வைத்து பின்னர் கட்டங் கட்டமாக ஆற்றில் வெளியேற்ற முடியும் என அவர் குறிப்பிட்டார்.
இதர மூன்று குளங்களில் சீரமைப்புப் பணி வரும் அக்டோபர் மாத மத்தியில் முடிவுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.




