தொலைபேசி அழைப்பு மோசடி- பி.எச்.டி. மாணவர் வெ.850,000 இழந்தார்

30 ஆகஸ்ட் 2025, 1:34 PM
தொலைபேசி அழைப்பு மோசடி- பி.எச்.டி. மாணவர் வெ.850,000 இழந்தார்

ஜோர்ஜ் டவுன், ஆக. 30- இங்குள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் தத்துவத் துறையில்  முனைவர் (பி.எச்.டி.) படிப்பை மேற்கொண்டு வரும் மாணவர் ஒருவர் சீன அரசாங்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்த ஒரு தொலைபேசி அழைப்பு  மோசடி கும்பலின் வலையில் சிக்கி கிட்டத்தட்ட 850,000  வெள்ளியை இழந்தார்.

சீனாவைச் சேர்ந்த அந்த 29 வயது மாணவர்  இந்த மோசடி தொடர்பில் கடந்த வியாழக்கிழமை தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் புகார் அளித்ததாக பினாங்கு மாநில  காவல்துறைத் தலைவர் டத்தோ அசிஸி இஸ்மாயில் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் ஷாங்காய் பொதுப் பாதுகாப்புப் பணியகத்தின் ஊழியர் என்று  அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு நபர் தன்னைத் தொடர்பு கொண்ட பிறகு இந்த மோசடி நாடகம்  தொடங்கியதாக பாதிக்கப்பட்டவர்  தனது புகாரில் கூறியதாக அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் பெயரைப்
பயன்படுத்தி அடையாள அட்டைகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் காசோலை புத்தகம் அடங்கிய ஒரு பொட்டலம் மலேசியாவிலிருந்து சீனாவிற்கு அனுப்பப்பட்டதாகவும் அந்த ஆவணங்கள் ஷாங்காய் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் மிரட்டியுள்ளார்.

பின்னர் அந்த தொலைபேசி தொடர்பு  ஹானர் அன் பொதுப் பாதுகாப்புப் பணியகத்தின் ஊழியர் என்று கூறிக்கொண்ட மற்றொரு நபருடன் இணைக்கப்பட்டது.
அம்மாணவரின் வங்கிக் கணக்கும் சீனாவில் இணைய மோசடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக அந்த நபர் கூறியுள்ளார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பின்னர், விசாரணை நோக்கங்களுக்காக தேவைப்படுவதாகக் கூறி  மின்-பணப்பைகளுக்கு பணத்தை மாற்றுமாறு சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை
அறிவுறுத்தியதாக அசிஸி கூறினார்.

பாதிக்கப்பட்ட அம்மாணவர் இம்மாதம்  6 முதல் 26 வரையிலான காலகட்டத்தில் 11 உள்ளூர் வங்கிக் கணக்குகள் மற்றும் மூன்று கிரிப்டோகரன்சி கணக்குகளுக்கு மொத்தம் 847,843 வெள்ளியை  30 பணப் பரிமாற்ற பரிவர்த்தனைகளைச் செய்துள்ளார் என்றார் அவர்.

இந்த புகார் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின்  420வது பிரிவின் கீழ்  விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.