புத்ராஜெயா, ஆக. 27 - உயர்மட்ட ஊழல் வழக்குகள் தொடர்பான விசாரணை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் என்ற பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் நடப்பிலுள்ள சட்ட அம்சங்களை ஆராய வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் ( சட்டம் மற்றும் சட்ட அமைப்பு சீர்திருத்தம்) டத்தோஸ்ரீ அஸாலினா ஓத்மான் கூறினார்.
இதுவரை, பெரும்பாலான வழக்கு விசாரணைகளில் குரல் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர அந்த வழக்குகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதில்லை என்று அவர் சொன்னார்.
சட்டரீதியாக என்னால் எதையும் அறுதியிட்டுக் கூற முடியாது. எனினும், இதற்கு நீதிமன்றத்தின் அனுமதி தேவை. வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்வதாக இருந்தால் அதனை நான் உரிய தரப்பிடம் கொண்டுச் செல்லவேண்டும். ஏனென்றால் வழக்கமாக குரல் பதிவு மட்டுமே இருக்கும். குரல் பதிவு என்றால் ஏற்கனவே நிறைய வழக்குகளில் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த விவகாரம் தீவிரமானதாக இருந்தால், நான் தலைமை நீதிபதியின் கவனத்திற்கு இதனைக் கொண்டுச் செல்ல வேண்டும் என்று இன்று இங்கு நடைபெற்ற மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வு மற்றும் தேசிய கொடியை பறக்கவிடும் இயக்கத்தை கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
நீதித் துறை மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதற்கு உயர்மட்ட ஊழல் வழக்குகள் தொடர்பான விசாரணை நேரடியாக ஒளிபரப்ப ப்பட வேண்டும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி முன்னதாக கூறியிருந்தார்.
நீதிமன்ற விசாரணை அம்சங்களை தவறாக திரித்து வெளியிடுவதற்கு சில தரப்பினர் சமூக ஊடங்களைப் பயன்படுத்துவதால் தேவையற்ற குற்றச்சாட்டுகள் எழுவதை தவிர்ப்பதற்கு இந்நடவடிக்கை அவசியமாகிறது என அவர் குறிப்பிட்டார்.




