கிள்ளான், ஆக. 8 - இளம் தலைமுறையினர் மத்தியில் மறைந்துள்ள கலைத் திறனை வெளிக் கொணரும் நோக்கில் சிலாங்கூர் சிறுவர் நட்சத்திரங்கள் 2025 பாடல் திறன் போட்டியை செந்தோசா சட்டமன்றத் தொகுதி ஏற்பாடு செய்துள்ளது.
ஐந்தாவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டியில் சுமார் 15,000 வெள்ளி மதிப்பிலான ரொக்கப் பரிசுகளை வெல்வதற்குரிய வாய்ப்பினை வெற்றியாளர்கள் பெறுவர் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி. குணராஜ் கூறினார்.
ஒன்பது முதல் 15 வயது வரையிலான சிறார்களை இலக்காக கொண்டு நடத்தப்படும் இப்போட்டியில் பங்கேற்பதற்கு இன்று தொடங்கி எதிர்வரும் ஆகஸ்டு 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.
இப்போட்டியில் 170 போட்டியாளர்கள் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். இதன் இறுதிச் சுற்று புக்கிட் ஜாலில் அரங்கில் எதிர்வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. அரையிறுதிப் போட்டி செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும்.
முதல் 10 இடங்களைப் பெறும் வெற்றியாளராகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று இன்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
கலைக் குடும்பம் மற்றும் செஜாத்ரா செந்தோசா சிலாங்கூர் அமைப்புகளின் ஆதரவுடன் நடத்தப்படும் இப்போட்டியின் இறுதிச் சுற்றை புக்கில் ஜாலில் அரங்கில் நடத்துவதற்கு ஏஜெண்டா சூரியா நிறுவனம் பெரிதும் துணை புரிந்துள்ளது என அவர் சொன்னார்.
இப்போட்டிக்கு சிலாங்கூரிலிருந்து மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் போட்டியாளர்கள் கலந்து கொள்வதால் பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை 170 பேரை எட்டும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
இளையோர் மத்தியில் மறைந்துள்ள கலைத் திறனை வெளிப்படுத்துவதையும் அவர்களுக்கு தன்னக்கையையும் தைரியத்தையும் வழங்குவதையும் நோக்கமாக கொண்டு கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இப்போட்டியை நாங்கள் நடத்தி வருகிறோம் என அவர் கூறினார்.
இந்த போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கு தேர்வாகும் 10 பேரை இறுதிச் சுற்றுக்குத் தயார் படுத்தும் வகையில் கலைக் குடும்பம் அமைப்பின் சார்பில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு கலைஞர் வழிகாட்டியாக நியமிக்கப்படுவார் என்றார்.
இபோட்டியில் வெற்றி பெறும் இளம் கலைஞர்களின் திறன் தொடர்ந்து மெருகூட்டப்படுவதை உறுதி செய்ய பயணம் தொடரும் திட்டத்தின் வாயிலாக அவர்களுக்கு தொடர்ந்து ஊக்குவிப்பும் வழிகாட்டுதலும் வழங்கப்படும் என்றார் அவர்
கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற போட்டியில் பங்கு கொணடு வெற்றி பெற்ற இளம் கலைஞர்கள் தமிழகத் தொலைக்காட்சிகளில் தோன்றி தங்களின் திறனை வெளிப்படுத்துவதற்குரிய வாய்ப்பினைப் பெற்றதையும் அவர் சுட்டிக்காட்டினார்.




