(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூலை 29 - பெஸ்தாரி ஜெயா, ஸ்ரீ கோத்தா குடியிருப்பில் கடந்த
வாரம் நடைபெற்ற கூட்டு துப்புரவு இயக்கத்தில் சுற்றுவட்டாரத்தைச்
சேர்ந்த சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.
இக்குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகளை சீர்படுத்தி நேர்மறையான
மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு நடத்தப்பட்ட இந்த
துப்புரவு இயக்கத்திற்கு கோல சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர்
அலுவலகமும் ஸ்ரீ கோத்தா குடியிருப்பாளர் சங்கமும் ஆதரவும்
ஒத்துழைப்பும் வழங்கியதாகக் கோல சிலாங்கூர் நகராண்மைக் கழக
உறுப்பினர் கே.விக்னேஸ்வர் கூறினார்.
இந்த துப்பரவு இயக்கத்தின் கீழ் அங்குள்ள சாலைகள்
பழுதுபார்க்கப்பட்டதோடு வடிகால்களும் இயந்திரங்களைக் கொண்டு
துப்புரவு செய்யப்பட்டன. கருத்திணக்கமும் கூட்டுப் பொறுப்புணர்வும்
வட்டார சமூகத்திற்கு சிறப்பான பலன்களைத் தரும் என்பதற்கு இந்த
கூட்டு துப்புரவு இயக்கம் ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறது என்று
அவர் சொன்னார்.
ஈஜோக் சட்டமன்றத் தொகுதியில் உள்ள இந்த ஸ்ரீ கோத்தா குடியிருப்பில்
இந்தியர்கள் பெரும்பான்மையினராக வசிக்கின்றனர். கூட்டுறவுக்
கழகத்திற்குச் சொந்தமான நிலத்தை அவர்கள் சொந்தமாக வாங்கி
உரிமையாளர்களாகிவிட்டனர். எனினும் சம்பந்தப்பட்ட கூட்டுறவுக் கழகம்
அந்த நிலத்தை நகராண்மைக் கழகத்திடம் ஆர்ஜிதம் செய்து கொடுக்காத
காரணத்தால் அங்குள்ள மக்கள் சாலை மற்றும் வடிகால் போன்ற
அடிப்படை வசதிகளைப் பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்
என்று அவர் தெரிவித்தார்.
இப்பகுதியில் கூடிய விரைவில் சோலார் விளக்குகள் மற்றும் தார் சாலை
அமைக்கும் பணியை மேற்கொள்வதாக நாடாளுமன்றத் தொகுதி
அலுவலகம் வாக்குறுதியளித்துள்ளதாக விக்னேஸ்வர் குறிப்பிட்டார்.
நீண்ட காலமாக நிலவி வரும் இந்த நில உரிமைப் பிரச்சனைக்கு தீர்வு
காண்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வரும் கோல சிலாங்கூர்
நாடாளுமன்ற அலுவலக பிரதிநிதிகளான அன்பரசன் மற்றும்
இளங்கோவுக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.
இவ்வட்டார மக்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்கு உதவுவதற்கு
ஏதுவாக முன்னெடுக்கப்படும் அனைத்து திட்டங்களுக்கும் அனைத்து
தரப்பினரும் இதே போல் ஒத்துழைப்பை நல்குவார்கள் எனத் தாம்
பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.


