ஷா ஆலம், ஜூலை 24 - நிலத்தின் வருமானத்தையும் செயல்திறனையும் அதிகரிப்பதற்காக விவேக கார் நிறுத்துமிட முறையின் (எஸ்.ஐ.பி.) அமலாக்கம் குறித்து பல ஊராட்சி மன்றங்களுடன் மாநில அரசு தொடர்ந்து விவாதித்து வருகிறது.
பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் (எம்.பி.பி.ஜே.) இந்த முயற்சிக்கு இதுவரை ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இது ஊராட்சி மன்ற மட்டத்திலான ஒரு அனுமதி செயல்முறையாகும்.
இதற்கு எம்.பி.பி.ஜே. இப்போது ஆட்சேபனை தெரிவித்துள்ளது. வருமானத்தை, குறிப்பாக பார்க்கிங் வசூலை அதிகரிக்க விரும்புவதால் ஆட்சேபனையின் அடிப்படை என்ன என்பதை நாங்கள் ஆராய்வோம் என அவர் சொன்னார்.
முன்பு பார்க்கிங் கட்டணத்தில் 30 விழுக்காட்டை மட்டுமே வசூலிக்க முடிந்தது. அதாவது 70 சதவீதம் வசூலிக்க முடியாத நிலையில் இருந்தது. தொழில்நுட்பத்தில் நாம் முன்னேற வேண்டும்.
ஆனால்,டத்தோ' இங் சூயி லிம் (ஊராட்சி மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர்) அவர்களுக்கு விளக்கமாகப் பதிலளிப்பார். மேலும் ஊராட்சி மன்றங்களிடமிருந்து அனுமதி பெறுவதற்கான செயல்முறை என்பதால் நாங்கள் மேலும் விவாதிப்போம் என்று அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
முன்னதாக, எதிர்வரும் ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் நான்கு ஊராட்சி மன்றங்களில் எஸ்.ஐ.பி. முறையின் மூலம் பார்க்கிங் வசூலை ரந்தாயன் மெஸ்ரா சென். பெர்ஹாட் நிறுவனம் செயல்படுத்தும் என்று டத்தோ இங் அறிவித்திருந்தார்.
பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம், ஷா ஆலம் மாநகர் மன்றம், சுபாங் ஜெயா மாநகர் மன்றம், செலாயாங் நகராண்மைக் கழகம் ஆகியவையே அந்த நான்கு ஊராட்சி மன்றங்களாகும்.

