ANTARABANGSA

பணியாளர்கள் 4 நாட்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்ய வேண்டும் - ஸ்டார்பக்ஸ்

15 ஜூலை 2025, 5:46 AM
பணியாளர்கள் 4 நாட்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்ய வேண்டும் - ஸ்டார்பக்ஸ்

வாஷிங்டன், ஜூலை 15 - எதிர்வரும் அக்டோபர் தொடங்கி வாரத்திற்கு 4 நாட்கள் அதாவது திங்கள் முதல் வியாழன் வரை அமெரிக்கா மற்றும் கனடாவிலுள்ள தனது வர்த்தகப் பணியாளர்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்ய வேண்டும் என ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அப்படி இல்லையென்றால் இழப்பீட்டை வாங்கிக் கொண்டு வேலையை விட்டு செல்லலாம் என ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.

இதுநாள் வரை வாரத்திற்கு 3 நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டியது கட்டாயமாக இருந்துள்ளது. அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான பிரையன் நிக்கோல் முன்மொழிந்த மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இப்புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சரிந்து வரும் ஸ்டார்பக்ஸ் வியாபாரத்தை தூக்கி நிறுத்த, 'மனிதர்களுக்கு இடையிலான தொடர்பை மேம்படுத்தும்' கலாச்சாரத்தை மீட்டெடுப்பதே இதன் நோக்கம் ஆகும்.

அலுவலகத்திற்கு நேரில் வந்து வேலை செய்வது, நிறுவனத்தின் தலைமைத்துவமும் வேலைச் சூழலும் வலுவடைவதற்கு முக்கியக் காரணமாகும் என நிக்கோல் தெரிவித்தார்.

ஏற்கனவே 1,100 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கம் செய்துள்ள நிலையில், ஸ்டார்பக்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தவிர்த்து, உணவு menu-வில் மாற்றங்களைக் கொண்டு வருதல், கடைகளை புது வடிவமைப்புக்கு உட்படுத்துதல் மற்றும் ஆர்டர் ஏதும் செய்யாமல் உட்கார்ந்து நேரம் கழிக்க அனுமதிக்கும் பழைய கொள்கையை மீட்டுக் கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளையும் நிக்கோல் முன்னெடுத்து வருகிறார்.

ஸ்டார்பக்ஸின் இந்த கடுமையான நிலைப்பாடு, தளர்வுப்போக்கை விரும்பும் பணியாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கும், நிறுவனத்தின் கலாச்சாரத்தையும் செயல்திறனையும் மீட்டெடுக்கும் தேவைக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை எடுத்துக்காட்டுகிறது.

அமெரிக்காவில் கோவிட்க்கு பிறகு அலுவலகத்திற்கு திரும்பியிருப்பது மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 விழுக்காட்டுத் தொழிலாளர்கள் வீட்டிலிருந்தும், 45 விழுக்காட்டினர் hybrid முறையில் அதாவது சில சமயம் அலுவலகத்திலிருந்தும் சில சமயம் வீட்டிலிருந்தும் வேலை செய்கின்றனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.