ஜெனீவா, ஜூன் 29- இஸ்ரேலிய இராணுவத்தின் தொடர்ச்சியான முற்றுகை மற்றும் தாக்குதல்களால் ஏற்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக காஸாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 112 பாலஸ்தீன சிறார்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு கூறியது.
இஸ்ரேலிய முற்றுகை மற்றும் இராணுவத் தாக்குதல்களால் காஸாவில் ஏற்பட்ட மனிதாபிமான நிலைமை "பேரழிவின் கட்டத்தைத் தாண்டிய விபரீதம்" என்று
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஒரு செய்திக் குறிப்பில் விவரித்தார்.
காஸா பகுதியில் உள்ள 36 மருத்துவமனைகளில் 17 மருத்துவமனைகள் மட்டுமே பகுதியளவு செயல்படுவதாகவும் வடக்கு காஸா மற்றும் தெற்கில் உள்ள ராஃபாவில் எந்த மருத்துவமனையும் செயல்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய மோதலால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகள் இவை என அவர் கூறியதாக பாலஸ்தீன செய்தி மற்றும் தகவல் நிறுவனம் (வாஃபா) தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) அமைப்புக்கு அப்பால் செயல்படும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலான உதவி விநியோக மையங்களில் உணவு பெற முயன்றபோது குறைந்தது 500 பேர் கொல்லப்பட்டதாகவும் டாக்டர் டெட்ரோஸ் தெரிவித்தார்.
கடந்த மார்ச் 2ஆம் தேதிக்குப் பிறகு பிறகு முதல் முறையாக உலக சுகாதார நிறுவனம் இந்த வாரம் காஸாவிற்குள் நுழைய முடிந்தது. ஆனால் அதன் திறன் மிகக் குறைந்த அளவில் மட்டுமே உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி வழங்குவதில் மனிதாபிமான நிறுவனங்கள் எதிர்கொள்ளும் கடுமையான சிரமங்களை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
காஸாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடி குறிப்பாக, அங்கு நிலவும் பட்டினி, கட்டாய இடப்பெயர்வு மற்றும் முடக்கப்பட்ட சுகாதார சேவைகள் குறித்து அனைத்துலக சமூகம் கவலை கொண்டுள்ளது என அவர் சொன்னார்.








