ஷா ஆலம், ஜூன் 21- கனமழை காரணமாக இங்குள்ள தாமான் புக்கிட் கெமுனிங்கில் நேற்று ஏற்பட்ட வெள்ள சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 61 பேர் இன்னும் டேவான் ஆஸ்டரில் திறக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
நேற்று மாலை 4.00 மணியளவில் திறக்கப்பட்ட போது இந்த நிவாரண மையத்திலிருந்த 298 பேருடன் ஒப்பிடும்போது இன்று எண்ணிக்கை குறைந்துள்ளதாக சமூக நலத்துறை தனது இணையத்தளத்தில் கூறியது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட இடத்தில் நிலைமை முழுமையாக சீரடைந்துவிட்டதோடு கட்டுக்குள் இருப்பதாக ஷா ஆலம் செக்சன் 15 தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய தலைவர் அகமதுநஸ்மி ஹலீல் கூறினார்.
அந்த இடத்தில் வானிலை நன்றாக இருப்பதோடு வெள்ளமும் முற்றிலுமாக குறைந்துவிட்டது. கால்வாய் மற்றும் வடிகால்களில் நீர் மட்டம் வழக்கமான அளவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று இன்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
அந்த குடியிருப்புப் பகுதியிலிருந்து தண்ணீரை வெளியேற்றும் பிரதான வடிகால் பம்ப் கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.








