ஜோகூர் பாரு, மே 24- முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ஈர்ப்பதற்கு ஏதுவாக நாட்டின் அரசியல் நிலைத்தன்மையை தொடர்ந்து வலுப்படுத்த பொதுச் சேவைத் துறையின் பணி நிரலில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று கெஅடிலான் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.
நாட்டின் வருமானத்திற்கு உத்தரவாதம் அளிப்பதற்கும் இளம் தலைமுறையினருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கும் இந்த அம்சம் மிக முக்கியமானது என்பதோடு இதனை நாம் சாதாரணமாக எண்ணி விடக்கூடாது என்றும் அவர் சொன்னார்.
நான் அண்மையில் சீனா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்ட போது கடுமையாகப் பாடுபட்ட அரசாங்க இயந்திரத்திற்கு குறிப்பாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சுக்கு நன்றி.
முதலீட்டு அமைச்சின் அதிகாரிகள் நிறைய முன்னேற்பாடுகளைச் செய்திருந்தனர். அந்த ஏற்பாடுகள் சிறப்பான வையாக இருந்ததோடு மலேசியாவின் நிலையை உணர்த்துவதற்கும் முதலீட்டு மையம் என்ற நாட்டின் நிலையை நிலைநிறுத்துவதற்கும் இது பெரிதும் உதவியது என அவர் குறிப்பிட்டார்.
அதே சமயம், முதலீடுகளை ஈர்க்க மாநிலங்களும் முயன்று வருகின்றன. கெஅடிலான் கீழ் உள்ள சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார்களான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண் ஆகியோருக்கும் நன்றி என அவர் தெரிவித்தார்.
நேற்று இங்கு கெஅடிலான் கட்சியின் 2025/2026 ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் பிரதமருமான அவர் இவ்வாறு கூறினார்.
குழுவாகச் செயல்படும் பாங்கு பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதோடு ரஹ்மா ரொக்க உதவித் திட்டத்தின் வாயிலாக அதிகமான உதவிகளை மக்களுக்கு வழங்கி வரும் நாடுகளில் ஒன்றாகவும் மலேசியா விளங்குகிறது என்றார் அவர்.
மொத்தம் 1,300 கோடி வெள்ளி ஒதுக்கீட்டிலான இந்த திட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள சுமார் 90 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். இது தவிர மேலும் பல உதவித் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அவர் சொன்னார்.








