வாஷிங்டன், மே 23- அனைத்துலக மாணவர்களை ஏற்றுக்கொள்ளும்
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் அதிகாரத்தை அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பின் நிர்வாகம் ரத்து செய்துள்ளதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் நேற்று தெரிவித்ததாக அனடோலு ஏஜென்சி கூறியது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர் மற்றும் பரிமாற்ற வருகையாளர் திட்டத்தின் சான்றிதழ் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட கடிதத்தில் நோயெம் தெரிவித்தார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அதன் வளாகத்தில் பயங்கரவாத விதைப்பு, யூத எதிர்ப்பு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டு ஆகிய செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் டிரம்ப் நிர்வாகம் இந்நடவடிக்கையை எடுத்ததாக அவர் கூறினார்.
ஒரு பல்கலைக்கழகம் அதன் பல கோடிக்கணக்கான டாலர் அறக்கட்டளை நிதியை வலுப்படுத்த வெளிநாட்டு மாணவர்களைச் சேர்ப்பதும், அதிக கல்விக் கட்டணத்தின் வழி பயனடைவதும் ஒரு சலுகையே தவிர உரிமை அல்ல.
சரியானதைச் செய்ய ஹார்வர்டுக்கு பல வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், அவற்றை அது நிராகரித்து விட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
சட்டத்திற்கு இணங்கி நடக்கத் தவறியதற்காக அவர்கள் மாணவர் மற்றும் பரிமாற்றத் திட்ட சான்றிதழை இழந்தனர் என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இது குறித்து கருத்துரைதாத ஹார்வர்ட் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் ஜேசன் நியூட்டன், அரசாங்கத்தின் இந்நடவடிக்கைகள் "சட்டப்படி செல்லாதவை" என்று விவரித்தார்.
140 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அனைத்துலக மாணவர்கள் மற்றும் அறிஞர்களை தொடர்ந்து வரவேற்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கும் நாட்டிற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதில் நாங்கள் முழுமையாக உறுதியாக உள்ளோம் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைத் துறையும் கடந்த திங்களன்று ஹார்வர்டுக்கு வழங்கிய 6 கோடி டாலர் அமெரிக்க கூட்டரசு மானியத்தை நிறுத்துவதாக அறிவித்தது.
டிரம்ப் நிர்வாகம் முன்னதாக, பல்கலைக்கழகத்திற்கான 220 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமான கூட்டரசு மானியங்களை முடக்கியது. இதில் 6 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களும் அடங்கும்.


