காஸா, மே 19 - இஸ்ரேலிய இராணுவத்தின் தொடர்ச்சியான இனப்படுகொலைத் தாக்குதல்கள் காரணமாகக் கடந்த 24 மணி நேரத்தில் காஸா பகுதியில் குறைந்தது 67 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் 361 பேர் காயமடைந்துள்ளனர் என்று மருத்துவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி பாலஸ்தீன செய்தி மற்றும் தகவல் நிறுவனம் (வாஃபா) தெரிவித்துள்ளது.
கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 53,339 ஆக உயர்ந்துள்ளதோடு மேலும் 121,043 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் சிறார்களாவர்.
இரண்டு மாத போர் நிறுத்தத்திற்குப் பிறகு கடந்த மார்ச் 18ஆம் தேதி இஸ்ரேல் இனப்படுகொலையை மீண்டும் தொடங்கியதிலிருந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 3,193 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 8,993 பேர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலியப் படைகள் ஆம்புலன்ஸ்கள் மற்றும் சிவில் பாதுகாப்புப் படைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதால் இப்பகுதியில் இடிபாடுகளுக்கு அடியில் அல்லது சாலைகளில் சிக்கியுள்ள பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்கள் உடல்களை அவசர சேவை பிரிவினரால் இன்னும் அடைய முடியவில்லை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) பாதுகாப்பு மன்றம் உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த நிலையிலும் இனப்படுகொலையைத் தடுக்கவும், காஸாவில் நிலவும் கடுமையான மனிதாபிமான நெருக்கடியைத் தணிக்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்துலக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தப் போதிலும் இஸ்ரேலின் இனப்படுகொலைத் தாக்குதல்கள் தடையின்றி தொடர்கின்றன.


