சிப்பாங், ஏப்ரல் 30 -- மலேசியாவிற்கு நான்கு நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொண்டிருந்த மாலத்தீவு அதிபர் டாக்டர் முஹ்மட் முய்சு இன்று தாயகம் திரும்பினார்.
இன்று காலை மணி 8 அளவில், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து, முய்சுவும் அவரது பேராளர்களும் மாலத்தீவு ஏர்லைன்ஸ் விமானம் வழியாகப் புறப்பட்டனர்.
மாலத்தீவு அதிபரின் வருகையின்போது, சுற்றுலா, சுகாதாரம் மற்றும் விளையாட்டுத் துறைகளை உள்ளடக்கிய. மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இரண்டு பரிமாற்றக் குறிப்புகளும் கையெழுத்தாகி பரிமாறிக் கொள்ளப்பட்டன.
மலேசியாவிற்கு வருகை தரும் 2026 பிரச்சாரத்தின் மூலம் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு, இரு நாடுகளுக்கும் இடையே சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்படும் என்று அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோஸ்ரீ அன்வார் கூறினர்.
--பெர்னாமா


