கோலாலம்பூர், ஏப். 24 - பூகம்பம் ஏற்பட்ட சமயத்தில் துருக்கியில் தாம்
உணர்ந்த பதற்றமான தருணங்களை வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ
ஃபாடில்லா யூசுப் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.
அடர்த்தியான நிகழ்ச்சி நிரல்கள் அடங்கிய துருக்கி மற்றும் இங்கிலாந்து
பயணத்தின் ஒரு பகுதியாக ஃபாடில்லா தனது பேராளர் குழுவினருடன்
நேற்று இஸ்தான்புல்லில் இருந்த போது ரிக்டர் அளவில் 6.2 எனப்
பதிவான நில நடுக்கம் அந்நாட்டை உலுக்கியது.
வலுவான நிலநடுக்கம் துருக்கியை உலுக்கிய போது இங்கிலாந்துக்கு
தலைநகர் லண்டன் செல்வதற்காக தாம் இஸ்தான்புல் அனைத்துலக
விமான நிலையத்தில் காத்திருந்ததாக அவர் சொன்னார்.
பூகம்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
சிறப்பு பிரமுகர்களுக்கான அறையிலிருந்து வெளியேறும்படி தாம் தனது
பேராளர் குழுவினரும் கேட்டுக் கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தொடக்கத்தில் ஏற்பட்ட நில அதிர்வு மிகவும் வலுவானதாக இருந்தது.
சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு கட்டிடத்திற்குள் நுழையும்படி நாங்கள்
கேட்டுக் கொள்ளப்பட்டோம் என அவர் சொன்னார்.
எனினும். சற்று வலு குறைந்த நில அதிர்வு இரண்டாம் முறையாக
உலுக்கிய போது மீண்டும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டோம். பத்து
நிமிடங்களுக்குப் பின்னர் உள்ளே நுழைய அனுமதி வழங்கப்பட்டது
என்றார் அவர்.
இந்த இயற்கைப் பேரிடரிலிருந்து தப்பி உள்நாட்டு நேரப்படி மாலை 4.00
மணிக்கு பாதுகாப்பாக லண்டன் சென்று சேர்ந்ததற்காக இறைவனுக்கு
தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக எரிசக்தி மாற்றம் மற்றும் நீர்
உருமாற்றத் துறை அமைச்சருமான அவர் கூறினார்.
பணி நிமித்தப் பயணம் மேற்கொண்டு மூன்று நாட்கள் துருக்கியில் இருந்த
ஃபாடில்லா, பின்னர் இங்கிலாந்துக்கான தனது பயணத்தை தொடர்ந்தார்.
இஸ்தான்புல் நகரின் சிலிவ்ரி மாவட்டம் அருகே மர்மாரா கடல் பகுதியில்
உள்நாட்டு நேரப்படி நேற்று பிற்பகல் 12.49 மணியளவில் பூகம்பம்
ஏற்பட்டது.








