கோலாலம்பூர், ஏப். 14- தாய்லாந்தில் கடந்த புதன்கிழமை
நிகழ்ந்த நகைக் கடை கொள்ளையில் சம்பந்தபட்ட சந்தேகத்தின் பேரில் தாய்லாந்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட மலேசியர், இந்நாட்டில் இரண்டு கடும் குற்ற வழக்குகளில் தேடப்படுவது உட்பட 10 முந்தைய குற்றப் பதிவுகளைக் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
அந்த 62 வயது நபர் மீது கொலை தொடர்பில் இரண்டு தேடப்படும் வழக்குகளும், 1969ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டத்தின் பிரிவு 3(1) இன் கீழ் மற்றொரு வழக்கும் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நாட்டிற்கு கொண்டு வரும் செயல்முறை மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு அந்த நபர் சம்பந்தப்பட்ட விசாரணை ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், தாய்லாந்தில் அவர் செய்த குற்றங்கள் குறித்து விசாரிக்கும் பொறுப்பு அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய போலீஸ் படைத்தலைவர் தலைவர் டான் ஸ்ரீ ரசாருடின் ஹூசேன் தெரிவித்தார்.
ஹாட் யாய் நகரில் ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுபட்டதற்காக அந்த ஆடவர் தாய்லாந்தின் பேங்காக்கில் கைது செய்யப்பட்ட உடனேயே அந்த நபரின் கைது குறித்து தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
அந்த நபர் இன்னும் விசாரணைக்காக ஹட்யாய் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மேலும் நாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கைக்காக இந்நாட்டில் அவர் செய்த குற்றங்களை நாங்கள் மேலும் விசாரிப்போம் என்று அவர் இன்று இங்கு தொடர்பு கொண்டபோது கூறினார்.
சம்பந்தப்பட்ட நபர் மலேசியாவில் வசிக்கவில்லை என்பதும் தாய்லாந்தில் ஒளிந்து கொள்ள போலி ஆவணங்களை அவர் பயன்படுத்தியதும் விசாரணையில் கண்டறியப்பட்டது என்று ரசாருடின் குறிப்பிட்டார்.
தாய்லாந்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டபோது அந்த நபர் சந்தேகத்திற்குரிய போலி தாய்லாந்து அடையாள அட்டையை வைத்திருந்ததாகவும் மலேசிய மை கார்டு அல்லது பாஸ்போர்ட் எதுவும் அவர் வசம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்..
கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தாய்லாந்தின் ஹாட் யாய் நகரில் நகைக் கடையில் நடந்த கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு முதியவர் பேங்காக்கின் நோந்தாபுரி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டதை தாய்லாந்து போலீசார் உறுதிப்படுத்தினர்








