கோல திரங்கானு, ஏப்ரல் 14 - வர்த்தக மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களுக்கான புதிய சீரான செயலாக்க நடைமுறைகள் (எஸ்.ஒ.பி.) மற்றும் வழிகாட்டுதல்களை சாலைப் போக்குவரத்துத் இலாகா (ஜே.பி.ஜே.) அடுத்த மாதம் அறிமுகப்படுத்தவுள்ளது.
கனரக வாகனங்கள், குறிப்பாக லோரிகள் சம்பந்தப்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பை நிவர்த்தி செய்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஜேபிஜே தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ரம்லி கூறினார்.
நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை மீறி மற்ற சாலைப் பயனாளர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டும் வர்த்தக வாகன ஓட்டுநர்கள் மீது எடுக்க வேண்டிய கடுமையான நடவடிக்கைகள் இந்த எஸ்.ஒ.பி.யில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
தற்போது, ஜே.பி.ஜே மற்ற பங்களிப்பாளர்களுடன் இணைந்து அந்த சீரான செயலாக்க நடைமுறையை விரிவாக ஆராய்ந்து வருகிறது. நாங்கள் 7.5 டன்களுக்கு மேல் எடையுள்ள வாகனங்கள் மீது கவனம் செலுத்தி வருகிறோம் என அவர் சொன்னார்.
போக்குவரத்து அமைச்சர் (அந்தோணி லோக்) முன்னர் அறிவித்த படி
வேக வரம்பை மீறும் வணிக வாகனங்கள், வலது தடத்தில் பயணிக்கும் கனரக வாகனங்களை தடை செய்வது ஆகியவை விரிவாக ஆராயப்படும் விஷயங்களில் அடங்கும் என்று அவர் நேற்று இரவு திரங்கானு ஜேபிஜே பாராட்டு விழா மற்றும் நோன்புப் பெருநாள் உபசரிப்பில் சந்தித்தபோது செய்தியாளர்களிடம் கூறினார்.
மற்றொரு நிலவரத்தில் கடந்த மார்ச் 24 முதல் ஏப்ரல் 8 வரை நடைபெற்ற ஆறு நாள் நோன்புப் பெருநாள் சிறப்பு நடவடிக்கையில் நாடு முழுவதும் 8,862 விபத்துகள் பதிவு செய்யப்பட்டதாக ஏடி பாட்லி தெரிவித்தார்.








