சுபாங் ஜெயா, ஏப். 14- வெள்ளப் பேரிடர் மீண்டும் நிகழாமல் தடுக்க வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.
வெள்ளம் ஏற்படும் ஒவ்வொரு முறையும் ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் இன்னலுக்குள்ளாவதைக் கருத்தில் கொண்டு இப்பிரச்சினைக்குத் உடனடித் தீர்வு காண்பது அவசியம் என பிரகாஷ் சம்புநாதன் கூறினார்.
இப்போது நிலைமை சீரடைந்து விட்டது. வெள்ளம் வடிந்துவிட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக நிவாரண மையத்தில் வீடு திரும்பியுள்ளனர். உடல் நிலை சரியில்லாத சிலர் மட்டுமே அங்கு இன்னும் தங்கியுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், அந்நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். வெள்ளத் தடுப்புத் திட்டங்களை விரைவுபடுத்தி அதிகப்படுத்தவும் முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என அவர் சொன்னார்.
எனது தொகுதியில் வசிப்பவர்கள் இந்தப் பிரச்சினையை மீண்டும் மீண்டும் சந்திப்பதைக் காண நான் விரும்பவில்லை. எங்களுக்கு அனைத்து தரப்பினரிடமிருந்தும் கவனமும் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. இவ்விவகாரத்தில் குடியிருப்பாளர்களும் ஒத்துழைக்க வேண்டும். குப்பைகளை கண்ட இடங்களில் வீசக் கூடாது என்று மீடியா சிலாங்கூரிடம் அவர் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை சிலாங்கூர் மாநிலத்தின் பூச்சோங், ஷா ஆலம், கிள்ளான் மற்றும் உலு லங்காட் ஆகிய இடங்களில் அதிகாலை முதல் தொடர்ந்து பெய்த கனமழையைத் தொடர்ந்து பல பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.








