கோலாலம்பூர், ஏப் 1- இங்குள்ள மேடான் ஸ்ரீ கிராமாட்டில் நேற்று பத்து பேரடங்கிய இரு கும்பல்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் ஆறு சந்தேக நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
உள்நாட்டினரான 20 முதல் 40 வயது வரையிலான அவர்கள் அனைவரும் நேற்று விடியற்காலை 2.30 மணியளவில் உலு கிளாங் போலீஸ் நிலைய வளாகத்தில் கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது அஸாம் இஸ்மாயில் கூறினார்.
இந்த கைகலப்பு தொடர்பில் நேற்று பின்னிரவு 12.19 மணியளவில் போலீசார் பொது மக்களிடமிருந்து புகாரைப் பெற்றதாகக் கூறிய அவர், கைது செய்யப்பட்டவர்களில் இருவர் முந்தையக் குற்றப் பதிவுகளைக் கொண்டுள்ளனர் என்றார்.
ஒரு கும்பலைச் சேர்ந்த ஆடவரின் சினமூட்டும் நடவடிக்கையால் சினமடைந்த நபர் தனது சகாக்களை உதவிக் அழைத்ததைத் தொடர்ந்து இரு கும்பல்களுக்கிடையே சண்டை மூண்டது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என அவர் சொன்னார்.
இந்த கைகலப்பில் காயங்களுக்குள்ளான ஆடவர் ஒருவர் சிகிச்சைக்காக அம்பாங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
உலு கிளாங் போலீஸ் நிலையத்தில் இருந்த போது ஆடவர் ஒருவர் மற்றொருவரின் முகத்திலும் உடலிலும் குத்தியதாக அவர் தெரிவித்தார்.
கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 147வது பிரிவு மற்றும் போலீஸ் நிலையத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டது தொடர்பில் 1967 ஆம் ஆண்டு போலீஸ் சட்டத்தின் 90வது பிரிவின் கீழ் அவர்கள் அனைவரும் மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.








