ஷா ஆலம், மார்ச் 31- கிள்ளான், தாமான் ஸ்ரீ காடோங்கில் மூன்று ஒற்றை மாடி வரிசை வீடுகள் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமாகின.
எனினும், இச்சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.
இந்த தீவிபத்து தொடர்பில் இரவு 11.09 மணிக்கு தனது துறைக்கு அழைப்பு வந்ததைத் தொடர்ந்து தென் கிள்ளான், வட கிள்ளான் மற்றும் அண்டாலாஸ் தீயணைப்பு நிலையங்களிலிருந்து 16 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் மூன்று இயந்திரங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் தெரிவித்தார்.
இந்த தீ விபத்தில் ஒரு வீடு மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் கூறின. இருப்பினும், மேலும் மூன்று வீடுகள் தீயில் பாதிக்கப்பட்டது விசாரணையில் கண்டறியப்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார்.
இரவு 11.45 மணியளவில் தீ அணைக்கப்பட்டதாகக் கூறிய அவர், தீக்கான காரணம் மற்றும் மொத்த இழப்பு இன்னும் விசாரணையில் உள்ளது என்றார்.








