ஷா ஆலம், மார்ச் 29 - நோன்புப் பெருநாளுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் பொருள்களுக்கு, குறிப்பாக 23 அத்தியாவசியப் பொருட்களுக்கான அரசாங்கத்தின் விலைக் கட்டுபாட்டு நிபந்தனையை பின்பற்றும்படி வர்த்தகர்கள் நினைவூட்டப்படுகிறார்கள்.
2025 நோன்புப் பெருநாளை முன்னிட்டு அமல்படுத்தப்பட்டுள்ள பண்டிகைக் கால உச்சவரம்பு விலைத் திட்டத்தின் உத்தரவுகளைப் பின்பற்றத் தவறும் வணிகர்கள் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று கிராமப்புற மேம்பாடு, ஒற்றுமை மற்றும் பயனீட்டாளர் விவகாரங்களுக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரிஸாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
இதுவரை, வர்த்தகர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையில் பொருள்களை விற்பனை செய்வதை நாங்கள் கவனித்துள்ளோம். ஆகவே, விலை அதிகமாக இருப்பதைக் காணும் வாடிக்கையாளராகள் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சின் சிலாங்கூர் மாநிலப் பிரிவிடம் புகாரளிக்கலாம் என்று அவர் சொன்னார்.
இந்த பண்டிகை காலத்தில் விலை அதிகரிப்பால் மக்களுக்கு சுமை ஏற்படுவதைக் காண நாங்கள் விரும்பவில்லை. அவர்கள் மலிவான விலையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என்று குறிப்பிட்டார்.
இதனிடையே, மாநிலத்தின் 25 இடங்களில் நடைபெறும் மாபெரும் ஏஹ்சான் ரஹ்மா திட்டத்தைப் பயன்படுத்தி குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குமாறு ரிஸாம் பொதுமக்களை வலியுறுத்தினார்.
இங்கு பல்வேறு வகையான பொருட்கள் நியாயமான விலையில் விற்கப்படுகின்றன. குடியிருப்பாளர்கள் அருகிலுள்ள இடங்களுக்குச் சென்று பொருள்களை வாங்கலாம் என்று அவர் கூறினார்.








