ஷா ஆலம், மார்ச் 29 - கார் நிறுத்துமிட கட்டணத்தை செலுத்தத் தவறியதற்காக விதிக்கப்படும் அபராதத் தொகையை குறைந்த பட்சம் 15.00 வெள்ளியாக குறைக்கும் இயக்கத்தை கிள்ளான் அரச மாநகர் மன்றம் (எம்.பி.டி.கே.) முன்னெடுத்துள்ளது
வரும் ஏப்ரல் 1 முதல் 30 வரை அமலில் இருக்கும் இந்த அபராதச் சலுகையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கிள்ளான் டத்தோ பண்டார் டத்தோ அப்துல் ஹமீட் ஹுசைன் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.
இந்தச் சலுகையில் கார் நிறுத்துமிட கட்டணம் உள்பட பல்வேறு போக்குவரத்துக் குற்றங்களை உள்ளடக்கிய குற்றப்பதிவுகளுக்கு வெ.15.00 முதல் வெ.300.00 வரை குறைந்தபட்ச அபராதம் விதிக்கப்படும் என அவர் சொன்னார்.
நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பது உட்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதைத் தவிர்க்க நிலுவையில் உள்ள அபராதத் தொகையை செலுத்துவதற்கான இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.
நேற்று மாநகர் மன்றத்தின் மாதாந்திரக் கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய அப்துல் ஹமீட், இந்த அபராதச் குறைப்புச் சலுகை சில குற்றங்களுக்கு பொருந்தாது என்றார்.
இதற்கிடையில், உள்ளூர் மக்கள் மதிப்பீட்டு வரியைச் செலுத்துவதை எளிதாக்குவதற்காக அரச மாநகர் வரும் ஏப்ரல் முழுவதும் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடமாடும் முகப்பிடச் சேவைகளையும் வழங்குகிறது என்றார் அவர்.
கீழ்க்கண்ட இடங்களில் நடமாடும்
முகப்பிடச் சேவை வழங்கப்படும்-
1. புக்கிட் ராஜா (நாசி கண்டர் மாமு பினாங்கு அருகே உள்ள வாகன நிறுத்துமிடம்)
நாள்: 19 – 20 ஏப்ரல் 2025
2. பாண்டமாரான் (மைடின் மார்ட் ராஜா மூடா மூசா அருகில்)
நாள்: 26 – 27 ஏப்ரல் 2025








