பாடாங் ரெங்காஸ், மார்ச் 26 - மலேசிய விமானப் போக்குவரத்துக் குழுமத்தின் (எம்.ஏ ஜி.) அண்மைய போயிங் விமானக் கொள்முதல் நடவடிக்கை அமலில் உள்ள நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளதாக நிதியமைச்சரின் அரசியல் செயலாளர் முகமது காமில் அப்துல் முனிம் தெரிவித்தார்.
இந்த விமானக் கொள்முதலில் சுயநல நோக்கம் உள்ளது என்ற எதிர்க்கட்சிகளின் கூற்றை அவர் நிராகரித்தார்.
முந்தைய அரசு நிர்வாகங்கள் கடைப்பிடித்த அமலில் உள்ள அதே அணுகுமுறையை நடப்பு அரசும் பின்பற்றுவதால் இந்த கொள்முதல் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பக்கூடாது என்று அவர் கூறினார்.
விமானங்களை கொள்முதல் செய்வதற்கான செயல்முறைக்கு நேரம் எடுக்கும் என்பதோடு விலை நிர்ணயம் மற்றும் பிற காரணங்களுக்கு ஏற்ப ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அண்மையில்தான் அனைத்து தரப்பினரும் இதற்கு ஒப்புக்கொண்டனர் என்று அவர் கூறினார்.
எது எப்படியிருப்பினும், எங்கள் கொள்கையும் அணுகுமுறையும் எப்போதும் போயிங் விமானங்களைப் பயன்படுத்துவதாகவே இருந்து வருகிறது. எனவே இதில் என்னதான் பிரச்சினை? அமெரிக்க அதிபருடன் (பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு) சந்திப்பு நடத்துவதற்கு அனுமதி கோருவது உட்பட இந்த கொள்முதலில்
சுயநலம் இருக்கிறது என்ற கேள்விக்கே இடமில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
நேற்று இங்குள்ள அல்-ஹடாரி பள்ளிவாசலில் இப்தார் பெர்டானா மற்றும் மடாணி நோன்புப் பெருநாள் அன்பளிப்பு வழங்கும் நிகழ்வில் சந்தித்தபோது அவர் கூறினார்.
பிரதமர் அன்வாருக்கும் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பிற்கும் இடையே சந்திப்பை ஏற்பாடு செய்வதற்கு பிரதிபலனாக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 30 விமானங்களை வாங்குவது தொடர்பான சாத்தியம் குறித்து கெராக்கான் தலைவர் டத்தோ டோமினிக் லாவ் சுமத்திய குற்றச்சாட்டிற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
இந்த விமானக் கொள்முதல் நடவடிக்கை உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறையில் மலேசியாவின் முக்கிய நிலையை வலுப்படுத்துவதற்கான முதலீடாகும் என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் கடந்த மார்ச் 22ஆம் தேதி தெளிவுபடுத்தி இருந்தார்.


