குவாந்தான், மார்ச் 26- தொலைபேசி மோசடிக் கும்பலின் மிரட்டலால் அச்சத்திற்குள்ளான தாதி ஒருவர் தனது சேமிப்புத் தொகையான 144,000 வெள்ளியைப் பறிகொடுத்தார்.
போலீஸ் அதிகாரி எனக் கூறிக்கொண்ட ஆடவர் ஒருவரிடமிருந்து கடந்த ஜனவரி 18ஆம் தேதி 39 வயதான அந்த தாதி தொலைபேசி அழைப்பைப் பெற்றதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யாஹ்யா ஓத்மான் கூறினார்.
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்த தாதியை அந்த ஆசாமி மிரட்டிய நிலையில் தமக்கு எதிராக குற்றச்சாட்டை அப்பெண் மறுத்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக போலீசில் புகார் செய்யும்படி அந்த ஆசாமி உத்தரவிட்டதோடு கைது செய்யப்போவதாக மிரட்டி அப்பெண்ணை குற்றத்தை ஒப்புக் கொள்ளச் செய்துள்ளார் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் தனது சேமிப்பிலிருந்த தொகையோடு வங்கியிலிருந்து பெற்ற கடன் தொகையையும் சேர்த்து மொத்தம் 144,000 வெள்ளியை சந்தேக நபரின் மூன்று வங்கி கணக்குகளில் சேர்த்துள்ளார் என்றார் அவர்.
அந்த நபர் வாக்குறுதியளித்தபடி பணம் திரும்ப கிடைக்காததைத் தொடர்ந்து சந்தேகம் கொண்ட அந்த மாது இது குறித்து குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நேற்று புகார் செய்ததாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த மோசடிச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.


