காஜாங், மார்ச் 26- இவ்வாண்டு ஜனவரி முதல் நேற்று முன்தினம் வரை
சிலாங்கூரிலுள்ள 948 வர்த்தக மையங்கள் மீது உள்நாட்டு வர்த்தக
மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சினால் மாநிலப் பிரிவு சோதனை
நடத்தப்பட்டது.
நோன்புப் பெருநாள் கால விலை உச்சவரம்புத் திட்டத்தின் கீழ்
மேற்கொள்ளப்பட்ட இந்த இந்த சோதனையின் போது 38 வர்த்தக வளாகங்கள்
விலைப்பட்டியலை வைக்காதது தொடர்பான குற்றங்களைப் புரிந்தது
கண்டறியப்பட்டதாக பயனீட்டாளர் விவகாரங்களுக்கான மாநில
ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரிஸாம் இஸ்மாயில் கூறினார்.
இச்சோதனையில் 37 வர்த்தக வளாகங்கள் பிரத்தியேக விலைப்
பட்டியலையும், ஒரு வளாகம் விலைப் பட்டியலையும் வைக்காதது
கண்டறியப்பட்டது. உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின
அமைச்சின் சிலாங்கூர் மாநிலப் பிரிவு களத்தில் தொடர்ந்து கண்காணிப்பு
பணிகளை மேற்கொண்டு வரும் என அவர் குறிப்பிட்டார்.
பொதுவாக, பெருநாள் கால விலை உச்சவரம்புத் திட்டம் சிறப்பாக
உள்ளது. பொருள்களின் விநியோகம் கட்டுப்பாட்டில் உள்ளதோடு
வணிகர்களும் ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர் என்று அவர் சொன்னார்.
இங்குள்ள காஜாங் எக்கோன்சேவ் பேரங்காடியில் பெருநாள் கால விலை
உச்சவரம்பு திட்டத்தின் கீழ் சோதனை மேற்கொண்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
விலைக்கட்டுப்படுத்தப்பட்ட 23 பொருள்கள் 2011ஆம் ஆண்டு
விலைக்காட்டுப்பாடு மற்றும் கொள்ளை லாபத் தடுப்புச் சட்டத்தின் கீழ்
சோதனைக்குட்படுத்தப்பட்டதாக அவர் சொன்னார்.
மத்திய அரசு நிலையில் 26 பொருள்கள் விலைக் கண்காணிப்பில்
வைக்கப்பட்டுள்ளன. எனினும், சிலாங்கூரில் அந்த பொருள்களின்
எண்ணிக்கை 23ஆக மட்டுமே உள்ளது என்றார் அவர்.
இந்த பெருநாள் கால விலை உச்சவரம்புத் திட்டம் மார்ச் 24ஆம் தேதி
தொடங்கி ஏப்ரல் 7ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.


