ஷா ஆலம், மார்ச் 25 - இம்மாதம் 18ஆம் தேதி வரை சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டிய குற்றத்திற்காக பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் 144 குற்றப்பதிவுகளை வெளியிட்டுள்ளது.
பி.ஜே. வாட்ச் எனும் திட்டத்தின் மூலம் இந்த அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா டத்தோ பண்டார் முகமது ஜாஹ்ரி சமிங்கோன் கூறினார்.
இந்த நடவடிக்கையில் கண்காணிப்பு மற்றும் சாதாரண உடையில் அவ்வப்போது ரோந்து செல்வதும் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.
11 சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டப்படும் இடங்களில் அகற்றும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் (சி.சி.டி.வி.) மூலம் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
இங்குள்ள 43 இடங்களில் சட்டவிரோதமாக குப்பைகளைக் கொட்டும் செயலில் 12 நபர்களும் 16 வாகனங்களும் ஈடுபட்டிருப்பதை சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் கண்டறிந்தோம்.
இக்குற்றங்களுக்காக பதினான்கு நபர்கள், மூன்று வாகனங்கள் மற்றும் ஒன்பது நிறுவனங்களுக்கு குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன என்று அவர் நேற்று பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் மாதாந்திர கூட்டத்திற்குப் பிறகு வெளியட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பெட்டாலிங் ஜெயாவில் வர்த்தக லைசென்ஸ் உரிமையாளர்கள் மத்தியில் சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதை அமலாக்கத் தரப்பின் தரவுகள் காட்டுவதாக அவர் மேலும் கூறினார்.
குப்பைகளை அகற்றும் விஷயத்தில் விதிகளைப் பின்பற்றி நடக்கும்படி மாநகர் மன்றம் வணிக உரிமையாளர்களுக்கு நினைவூட்டுகிறது.
பெட்டாலிங் ஜெயா குடியிருப்பாளர்களின் நல்வாழ்வுக்காக சுற்றுச்சூழலை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று ஜாஹ்ரி தெரிவித்தார்.








