அங்காரா, மார்ச் 24- காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 41 பாலஸ்தீனர்கள் கொல்லப் பட்டனர். இதனுடன் சேர்த்து கடந்த 2023 இல் போர் தொடங்கியது முதல் அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 50,021 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி அனாடோலு ஏஜென்சி நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட இரண்டு பேரின் உடல்களும் இதில் அடங்கும் என்று சுகாதார அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
இத்தாக்குதலில் காயமடைந்த 61 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் இஸ்ரேலிய தாக்குதல்களில் காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 113,274 பேராக உயர்ந்துள்ளது என அமைச்சு குறிப்பிட்டது.
மீட்புக் குழுக்களால் அணுக முடியாத காரணத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியிலும் சாலைகளிலும் சிக்கிக் கொண்டுள்ளனர் என்று அது மேலும் கூறியது.
கடந்த ஜனவரி மாதம் நடைமுறைக்கு வந்த போர்நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை மீறி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் திடீர் வான் தாக்குதல்களில் 700க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 1,200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


