ஷா ஆலம், மார்ச் 23- மாநிலப் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் துறைகளில் ஒன்றாக சில்லறை வணிகத் துறை விளங்குவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இங்குள்ள செத்தியா சிட்டி மாநாட்டு மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெஸ்டிவல் ராயா சிலாங்கூர் ஹேவோக் 2025 போன்ற நிகழ்வுகள் பொருளாதாரத்தை மேலும் சிறப்பான நிலைக்கு கொண்டுச் செல்லக்கூடிய உந்து சக்தியாகவும் தளமாகவும் விளங்கும் என்று அவர் சொன்னார்.
சில்லறை வணிகத்திற்கு மிகவும் பொருத்தமான இடமாக சிலாங்கூர் விளங்குகிறது. மாநில மக்களின் வாங்கும் திறனோடு 70 முதல் 80 விழுக்காடு வரையிலான இணைய வசதியும் பொருளாதார மையம் என்ற நிலையும் அதற்கு காரணமாக விளங்குகிறது.
மாநில பொருளாதாரத்திற்கு பங்களிக்கக் கூடிய துறைகளில் ஒன்றாக சில்லறை வணிகத் துறை எதிர்காலத்தில் விளங்கும் என்று நான் நம்புகிறேன் என அந்த நிகழ்வினைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் தொழில்முனேவோர் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமியும் கலந்து கொண்டார்.
இணைய வர்த்தக நடவடிக்கைகள் தற்போது அதிகரித்து வரும் நிலையிலும் இதுபோன்ற நிகழ்வுகள் பொது மக்கள் நேரடியாக பொருள்களை வாங்கும் அனுபவத்தைப் பெறுவதற்குரிய வாய்ப்பினையும் வழங்குகிறது என்றார் அவர்.
இதுதான் வர்த்தக உலகின் புதிய சூழல். இங்கு வாடிக்கையாளர்கள் நேரடியாக மட்டுமின்றி இணையம் வாயிலாகவும் பொருள்களை வாங்கும் நடைமுறை வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது என்று அவர் சொன்னார்.








