ஷா ஆலம், மார்ச் 23- நகைக்கடை ஒன்றில் ஆயுமேந்தி நடத்திய கொள்ளையில் சுமார் 20 லட்சம் வெள்ளி மதிப்புள்ள நகைகளை அபகரித்த மகிழ்ச்சி ஆறு மணி நேரம் கூட நீடிக்காத நிலையில் அக்கொள்ளையன் போலீஸ் பிடியில் சிக்கினான்.
கோத்தா டாமன்சாராவிலுள்ள பேரங்காடியில் செயல்பட்டு வந்த நகைக்கடையில் நிகழ்ந்த அக்கொள்ளையில் சம்பந்தப்பட்ட அந்த ஆடவன் சிலாங்கூர் போலீஸ் தலைமையகம் மற்றும் பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் நேற்றிரவு 10.15 மணியளவில் உலு சிலாங்கூர், புக்கிட் பெருந்தோங்கில் கைது செய்யப்பட்டதக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.
இந்த கைது நடவடிக்கையின் வாயிலாக அந்த நகைக்கடையில் கொள்ளையிடப்பட்ட நகைகளில் ஒரு பகுதி கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
கைது செய்யப்பட்ட ஆடவனும் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளும் மேல் நடவடிக்கைக்காக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்திறகு கொண்டுச் செல்லப்பட்டதாகக் கூறிய அவர், சுடும் ஆயுதமேந்தி கொள்ளையிட்டதற்காக இந்த சம்பவம் சுடும் ஆயுதச் சட்டத்தின் (கூடுதல் தண்டனை) 4வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.
நேற்று மாலை 4.56 மணியளவில் கோத்தா டாமன்சாராவிலுள்ள பேரங்காடியில் செயல்பட்டு வந்த நகைக்கடையில் நகைகள் துப்பாக்கி முனையில் கொள்ளையிடப்பட்டது தொடர்பில் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்த தாக அவர் குறிப்பிட்டார்.
உள்நாட்டு ஆடவர் என சந்தேகிக்கப்படும் அந்நபர் இக்கொள்ளையின் போது துப்பாக்கியை பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.
அந்த நகைக்கடையின் கண்ணாடிப் பேழையில் ஏழு தட்டுகளில் வைக்கப்பட்டிருந்த நகைகளை அக்கொள்ளையன் கொள்ளையிட்டுத் தப்பியதாக கூறிய அவர், களவு போன நகைகளின் மதிப்பு சுமார் 20 லட்சம் வெள்ளி என மதிப்பிடப்படுகிறது என்றார்.








