ஷா ஆலம், மார்ச் 23- தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்த இலக்கவியல் மயமாக்கல் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஆராய சிலாங்கூரில் உள்ள தொழில்முனைவோர் ஊக்குவிக்கப் படுகிறார்கள்.
பெரும்பாலான வாடிக்கையாளர்களின் கொள்முதல் நடைமுறை இணையத்திற்கு மாறிவிட்டதால் கடைகளில் விற்பனையை நம்பியிருக்க முடியாது என்று தொழில்முனைவோர் ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி கூறினார்.
தங்களின் விற்பனை எதிர்பார்த்த இலக்குகளை எட்டவில்லை என்பது குறித்து சாலையோர மற்றும் சந்தை வியாபாரிகளிமிருந்து பல குறைபாடுகளும் புகார்களும் வந்த வண்ணம் உள்ளன
வாடிக்கையாளர்கள் இப்போது ஷாப்பிங் செய்வதற்கு வேறு மாற்று வழிகளைக் கொண்டுள்ளனர். இணைய வர்த்தகத்தை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். எனவே தொழில்முனைவோர் சமீபத்திய சூழலுக்கு ஏற்ப தங்கள் வணிகங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று அவர் இங்கு ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது கூறினார்.
ஹிஜ்ரா சிலாங்கூர், சிலாங்கூர் 1000 டிஜிட்டல் மற்றும் பிளாட்ஃபார்ம் சிலாங்கூர் (பிளாட்ஸ்) உள்ளிட்ட பல்வேறு திட்டஙகளை மாநில அரசு வழங்குகிறது. இதில் ரொக்கமில்லா விற்பனை பரிவர்த்தன வழிகாட்டுதல்களும் அடங்கும் என்று முகமது நஜ்வான் தெரிவித்தார்.
நான் அண்மையில் பூச்சோங் சந்தைக்குச் சென்றிருந்தேன். அங்கு பிளாட்ஸ் திட்டத்தில் பங்கேற்ற வர்த்தகர்களும் இருந்தனர். அவர்கள் முன்பு ரொக்கமாக விற்பனை செய்ததைக் காட்டிலும் ரொக்கமில்லா முறைக்கு மாறியபோது தங்கள் வணிகம் மிகவும் லாபகரமானதாக மாறியதாக கூறினர். என்று குறிப்பிட்டார்.
தொழில்முனைவோர் தற்போதைய வணிக முன்னேற்றங்களுக்கு ஏற்ப, குறிப்பாக இலக்கவியல் மயமாக்கலைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். இதன் மூலம் சிறந்த லாபத்தை ஈட்ட முடியும் என்று அவர் தெரிவித்தார்.








