ராமல்லா, மார்ச் 19- காஸா தீபகற்பத்தில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைப் போரை நிறுத்த அனைத்துலகத் தலையீடு உடனடியாகத் தேவை என பாலஸ்தீன அரசு நேற்று வலியுறுத்தியதாக அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்த நிலையிலும் நேற்று அதிகாலை காஸா பகுதி மீது இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தின. இதில் 320க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் சிறார்கள் உட்பட பொதுமக்கள் என்பதை காஸாவிலிருந்து வெளியிடப்பட்ட படங்கள் காட்டுகின்றன. அவர்களின் வீடுகள் மீதும் இரவு நேரத்தில் குண்டுகள் வீசப்பட்டன.
காஸாவில் பொதுமக்கள் மீது இஸ்ரேலிய படைகள் நடத்தும் இந்த தாக்குதல்கள் காசஸாவின் மறுகட்டமைப்புக்கான அனைத்துலக முயற்சிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் இஸ்ரேல் அதன் போர்நிறுத்தக் கடமைகளைத் தவிர்க்கும் நோக்கிலும் உள்ளதாக பாலஸ்தீன வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.
அமைதியை அடைவதற்கும் தாக்குதல்களை நிறுத்துவதற்கும் மோதல் தீர்வுக்கான இலக்கை மீட்டெடுப்பதற்கும் அரசியல் தீர்வுதான் திறவுகோல் என்று அந்த அறிக்கை வலியுறுத்தியது.
தாக்குதல்களை உடனடியாக நிறுத்துவதற்கு உறுதியான அனைத்துலக நிலைப்பாட்டை நாங்கள் கோருகிறோம். மேலும் எங்கள் மக்களை கட்டாயமாக இடம் பெயரச் செய்வதற்கான திட்டங்களை செயல்படுத்தும் ஆக்கிரமிப்பு அரசின் முயற்சிகளுக்கு எதிராக எச்சரிக்கிறோம் என்று அமைச்சு மேலும் கூறியது.
கடந்த 2023 அக்டோபர் முதல் காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் மிருகத்தனமான இராணுவ நடவடிக்கையில் 48,500 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் சிறார்களாவர். மேலும் இப்போரில் 112,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


