ஷா ஆலம், மார்ச் 18 - சிலாங்கூரில் நடைபெறவிருக்கும் 2026 மலேசிய விளையாட்டுப் போட்டிகளில் (சுக்மா) கூடுதலாக இடம்பெறவுள்ள ஐந்து போட்டிகள் குறித்து மாநில அரசு நோன்பு பெருநாளுக்குப் பிறகு முடிவு செய்யவுள்ளதாக இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அப்போட்டியில் கூடுதல் விளையாட்டுகளை முன்மொழிய மற்ற மாநிலங்களை உச்சமன்றம் அனுமதிக்கும் என்றும் அவர் கூறினார்.
கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெற்ற சுக்மா உச்ச மன்றக் கூட்டத்தின் போது ஐந்து கூடுதல் நிகழ்வுகளை முன்மொழிய மாநிலங்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டது. இது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால்
நோன்புப் பெருநாளுக்குப் பிறகு அந்த கூடுதல் ஐந்து நிகழ்வுகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று அவர் நேற்று சிலாங்கூர் இளைஞர் இப்தார் 2025 இல் சந்தித்தபோது அவர் தெரிவித்தார்.
சுக்மா 2026 இல் போட்டியிடும் விளையாட்டு நிகழ்வுகள் ஆகஸ்டு மாதத்தில் இறுதி செய்யப்படும் என்று நஜ்வான் முன்னதாக கூறியிருந்தார். இதில் உபசரனை மாநிலம் என்ற முறையில் சிலாங்கூர் முன்மொழிந்த பிக்கல்பால் போட்டியும் அடங்கும்.
இதற்கிடையில், சுக்மா 2026 தொடக்க விழாவிற்கு சிப்பாங் அனைத்துலகப் பந்தயத் தடம் முக்கிய இடமாக இருக்கும் என்று நஜ்வான் கூறினார். அதே நேரத்தில் நிறைவு விழாவுக்கான இடங்களை தாங்கள் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிறைவு விழாவில் பொதுவாக திறப்பு விழா அளவுக்கு பெரிய கூட்டம் இருக்காது. எனவே தற்போதைய தேவைகளுக்கு ஏற்ற ஒரு இடத்தை நாங்கள் தேடுகிறோம் என்றார் அவர்.








