சிப்பாங், மார்ச் 18- டெங்கில், சுங்கை பாரிட் தம்போயில் 90 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி செலவில் வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை (ஜே.பி.எஸ்.) மேற்கொண்டு வரும் வெள்ளத் தடுப்புத் திட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடல் பெருக்கு சம்பவங்களால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க கரைகளை வலுப்படுத்துவது, வடிகால்களைத் தரம் உயர்த்துவது உள்ளிட்ட பணிகளை சிப்பாங் மாவட்ட ஜே.பி.எஸ். மேற்கொண்டு வருவதாக சிப்பாங் மாவட்ட அதிகாரி கைரில் அஸாலி இப்ராஹிம் கூறினார்.
இத்தகைய மத்திய கால மற்றும் குறுகிய கால நடவடிக்கைகளின் வாயிலாக அடிக்கடி வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் நிலைமையை சீர்படுத்த முடியும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இங்குள்ள டேசா செந்தோசா பள்ளிவாசல் ரமலான் மற்றும் சிப்பாங் மாவட்ட நிலையிலான நோன்புப் பொருநாள் உதவிப் பொருள் அன்பளிப்பு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இட்ரிஸ் எனப்படும் தென் சிலாங்கூர் ஒருங்கிணைந்த மேம்பாட்டு பிரதேச வளர்ச்சித் திட்டத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (கே.எல்.ஐ.ஏ.) இந்த பிராந்தியத்தில் விமான பழுதுபார்ப்பு பராமரிப்பு சேவையில் (எம்.ஆர்.ஒ.) முக்கிய இடத்தைப் பிடிக்கும் எனவும் அவர் சொன்னார்.
வர்த்தக விமானங்கள் மற்றும் தனியார் விமானங்களுக்கான எம்.ஆர்.ஒ. சேவையை வழங்கும் வசதியை கே.எல்.ஐ.ஏ. விரைவில் கொண்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரஸ் ஷா டேசா செந்தோசா பள்ளிவாசலை திறந்து வைத்தார். கடந்த 2022ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த பள்ளிவாசலில்ல் 2,300 பேர் வரை ஒரே நேரத்தில் தொழுகையில் ஈடுபட முடியும்.








