பெட்டாலிங் ஜெயா, மார்ச் 4- மலேசியாவில் மகிழ்ச்சிகரமான நகருக்கான அங்கீகாரத்தை பெட்டாலிங் ஜெயா இரண்டாவது முறையாக இவ்வாண்டும் பெற்றுள்ளது.
நகர் மற்றும் புறநகர் மேம்பாட்டுத் துறை மேற்கொண்ட ஆய்வின் வாயிலாக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா டத்தோ பண்டார் முகமது ஜாஹ்ரி சாமிங்கோன் கூறினார்.
கடந்தாண்டு நாங்கள் மகிழ்ச்சிகரமான நகருக்கான அங்கீகாரம் உள்பட உள்நாட்டு மற்றும் அனைத்துலக நிலையில் 28 விருதுகளை வென்றுள்ளோம். இறைவன் அருளால் இவ்வாண்டும் இந்த அங்கீகாரத்தை நாங்கள் மீண்டும் பெற்றுள்ளோம். இந்த விருதளிப்பு நிகழ்வு வரும் மார்ச் மாதம் 20ஆம் தேதி நடைபெறும் என்று அவர் சொன்னார்.
இந்த அங்கீகாரத்திற்கான தேர்வு சுற்றில் சுற்றுச்சூழல், உள்ளுர் தலைமைத்துவம், ஊராட்சி மன்றச் சேவை, அடிப்படை வசதிகள் மற்றும் குடியிருப்பாளர்களின் மனநிறைவு உள்ளிட்ட 14 அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன என அவர் குறிப்பிட்டார்.
இந்த அங்கீகாரம் அனைத்து பணியாளர்களுக்கும் அங்கீகாரமாகவும் மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதற்கு ஏதுவாக கடுமையாக உழைப்பதற்குரிய உந்து சக்தியாகவும் விளங்கும் எனத் தாம் நம்புவதாக அவர் சொன்னார்.
மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பெறப்படும் ஒவ்வொரு புகார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கும் அதேவேளையில் அடிப்படை பராமரிப்பு பணிகள் மீது கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.
பொது மக்களின் வசதிக்காக பூங்காக்களில் சீரமைப்பு சுத்தம் செய்யும் பணிகளை கடந்த காலங்களில் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தோம். இந்த பணிகள் தொடர்ந்தாற்போல் தரம் உயர்த்தப்படும் என்று அவர் கூறினார்.








