சிரம்பான், பிப். 21- கோல பிலாவில் தொழுநோய் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதோடு ஆக்ககரமான முறையில் சிகிச்சை வழங்கப் படுவதால் நோயாளிகள் இனி தனிமைப் படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சு உறுதியளித்துள்ளது.
ஆகவே, நோய்த் தொற்றைக் கண்டறியும் நடவடிக்கையில் சுகாதாரக் குழுக்களுடன் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று சுகாதார அமைச்சு இன்று ஒரு அறிக்கையின் மூலம் கேட்டுக் கொண்டது.
நோய்த் தொற்று மற்றும் தொடர்புகளைக் கண்டறிவது, தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன. தொழுநோய் போன்ற அறிகுறிகள் உள்ள எந்தவொரு நபரும் அருகிலுள்ள சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோல பிலாவிலுள்ள கம்போங் செர்குன் மற்றும் கம்போங் குண்டூரில் தொழுநோய் நோயாளிகளைக் கண்டறியும் முயற்சியாக நெகிரி செம்பிலான் மாநில சுகாதாரத் துறை இம்மாதம் 19 ஆம் தேதி வரை 460 குடியிருப்பாளர்களில் 368 பேரிடம் பரிசோதனைகளை நடத்தியது.
கடந்தாண்டு ஜூலை முதல் இலக்கு அடிப்படையில் தொழுநோய் பாதிப்புகளைக் கண்டறிந்து கண்காணிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று வரை ஒன்பது தொழுநோய் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அனைத்து நோயாளிகளும் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொழுநோய் பாதிப்பு காரணமாக கம்போங் செர்குனைச் சேர்ந்த 18 வயது நோயாளி ஒருவர் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி உயிரிழந்தார். முன்னதாக அவர் காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி போன்ற அறிகுறிகள் காரணமாக துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கோல பிலாவின் கம்போங் ஒராங் அஸ்லி செர்குனைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் தொழுநோய் காரணமாக கடந்த திங்கள்கிழமை உயிரிழந்த வேளையில் மேலும் எட்டு பேர் சிகிச்சை பெற்று வருதாவதாக ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டிருந்தன.


