ஜோர்ஜ் டவுன், பிப் 21- எளிதில் ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்ட ‘கம்மி‘ எனும் மிட்டாய் தொண்டையில் சிக்கிக் கொண்ட நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பத்து வயதுச் சிறுவன் சிகிச்சைப் பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தான்.
முகமது ஃபாஹ்மி ஹாபிஷ் முகமது பக்ருடின் என்ற அச்சிறுவனின் மரணத்தை அவரது உறவினரான சித்தி ஃபர்ஹானி முகமது பிக்ரி (வயது 33) உறுதிப்படுத்தினார்.
பினாங்கு மருத்துவமனையில் சிறார் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த நான்காம் வகுப்பு மாணவன் முகமது ஃபாஹ்மி சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்றிரவு 11.00 மணியளவில் உயிரிழந்ததாக பெர்னாமா தொடர்பு கொண்ட போது அவர் தெரிவித்தார்.
முகமது ஃபாஹ்மியின் மறைவு தொடர்பான தகவலை அவரது தாயார் சற்று முன் என்னிடம் தெரிவித்தார். அவரது உடல் பெர்மாத்தாங் பிஞ்சாயில் நல்லடக்கம் செய்யப்படும் என்ற தகவலையும் அவர் வெளியிட்டார் என்று சித்தி ஃபர்ஹானி மேலும் சொன்னார்.
பட்டர்வெர்த், சுங்கை டுவா தேசியப் பள்ளியில் நான்காம் ஆண்டு பயின்று வரும் முகமது ஃபாஹ்மி நேற்று முன்தினம் ‘கம்மி‘ எனும் மிட்டாய் தொண்டையில் சிக்கிக் கொண்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டான். பள்ளிக்கு வெளியே விற்கப் பட்டதாகக் கூறப்படும் அந்த மிட்டாயை அச்சிறுவன் வாங்கி உட்கொண்டதாக நம்பப்படுகிறது.
நாட்டில் மாணவர்கள் பள்ளிக்கு வெளியில் விற்கப்படும் உணவு, சுவை பாணங்களை வாங்க வேண்டாம் என்று அறிவுறத்தப்பட்டிருந்தாலும், அதை வாங்குவதை நிறுத்த முடியவில்லை. இதனால் பள்ளிக்கு மிக அருகில் அங்காடி விற்பனைகளுக்கு முடிவுகட்ட பல இயக்கங்கள் அதிகார குழுக்களை வற்புறுத்துகின்றன.


